

தவெக தலைவர் விஜய் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் பாமக வேட்பாளர் திலகபாமா எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு தேர்தல் அலுவலர் ஏற்றுக் கொண்டதற்கு தற்போது எதிர்ப்பு எழுந்துள்ளது.
தவெக கட்சித் தலைவர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்கு பாமக வேட்பாளராக இருக்கக்கூடிய திலகபாமா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்
விஜய் வேட்பு மனுவில் கையெழுத்திட்டவர் உண்மையான நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் அல்ல எனவும் இரு தொகுதிகளிலும் மாறுபாடான விபரங்களை விஜய் அளித்துள்ளார் எனவும் கூறி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தாலும் விஜய்யின் வேட்பு மனு ஏற்கப்பட்டது என தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனுவிற்கு ஆட்சேபனை எழுந்துள்ளது. ஆதவ் தனது நிறுவனங்கள் பலவற்றை மறைத்துள்ளதால் வேட்பு மனுவை ஏற்க சுயேச்சைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆதவ் அர்ஜுனா தனது மனைவி தொடர்புடைய 35 நிறுவனங்களை மறைத்ததாகவும் வங்கி வைப்புத் தொகை வருமானத்தையும் மனுவில் மறைத்துள்ளதாகவும் ரூபாய் 2 கோடி ரூபாய் ரொக்கமாக ஆதவ் வைத்துள்ளதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளால் வேட்பு மனுவை ஏற்க எதிர்ப்பு எழுந்துள்ளது.
குற்றச்சாட்டுகளுடன் ஆதவ் அர்ஜுனாவின் மனுவை ஏற்கக் கூடாது என எதிர்க்கட்சிகளுடன் சுயேச்சை வேட்பாளர் முரளி வினோத் என்பவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் தேர்தல் அதிகாரி வந்து சரிபார்க்கும் வரை மனுவின் மீதான பரிசீலனையை தள்ளி வைத்தார் தேர்தல் அலுவலர்.