சூரியனை ஆய்வு செய்ய ரெடியானது ஆதித்யா- எல்1!

ஆதித்யா- எல்1
ஆதித்யா- எல்1
Published on

சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் ஆதித்யா- எல்1 விண்கலம் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவு குறித்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ,அதனைத் தொடந்து சூரியன் குறித்த ஆய்விலும் ஈடுபடுகிறது. அதற்கான ஆதித்யா- எல்1 விண்கலத்தை இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தயார் நிலையில் உள்ள ஆதித்யா- எல்1 விண்கலம், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு  கொண்டுசெல்லப்பட்டது. சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியை இந்த விண்கலம் மேற்கொள்ள உள்ளதால், அதற்கு ஆதித்யா என்று பெயரிடப்பட்டுள்ளது.

சூரியன் மற்றும் பூமியின் மையப் பகுதியான 'லெக்ரேஞ்சியன் பாயின்ட் ஒன்'-ஐ மையமாகக் கொண்டு இந்த விண்கலம் ஏவப்பட உள்ளதால்,  ஆதித்யா- எல்1 என்று இஸ்ரோ பெயரிட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் கொண்ட சூரியனின் ''லெக்ரேஞ்சியன் புள்ளி 1-ல் நிலைநிறுத்தப்பட உள்ளது.

நான்கு மாத கால பயணத்திற்குப் பிறகு  இந்த விண்கலம் அதன் சுற்றுப்பாதையில் நுழைய உள்ளது. பின்னர்  சூரியனைப் பற்றிய ஆய்வுகளை ஆதித்யா- எல்1 மேற்கொள்ள உள்ளது. சூரியனில் எழக்கூடிய சூரிய புயல்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும் இந்த முயற்சி பயனுள்ளதாக இருக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இதுபோன்ற விண்கலத்தை அனுப்பும் நான்காவது நாடு இந்தியா. இதுவரை, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனங்கள் சூரியன் குறித்த ஆய்வுக்கான விண்கலங்களை அனுப்பியுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com