

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அடிப்படைப் பணியான வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தத் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளில் மும்முரமாகத் தயாராகி வருகின்றன.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள், வருகிற டிசம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து தலைமைக்கழகத்தில் சமர்ப்பிக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 15.12.2025 - திங்கட்கிழமை முதல் 23.12.2025 செவ்வாய்க்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும்; முதல் நாளான 15.12.2025 அன்று நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவவாறு அதில் தெரிவித்துள்ளார்.