

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்திக்காமல் சென்னை திரும்பிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது சொந்த மாவட்டமான புதுக்கோட்டைக்குச் சென்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து இவர் நீக்கப்பட்டு புதிய நிர்வாகி நியமிக்கப்பட்டதையடுத்து எழுந்த உட்கட்சி மோதலால் இந்த சந்திப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டைக்குச் சென்ற அவர், தனது விராலிமலை தொகுதி மற்றும் மாவட்ட ஆதரவாளர்களை நேரில் சந்தித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளராக பழனிவேல் என்பவர் புதியதாக நியமிக்கப்பட்டார். புதிய மாவட்டச் செயலாளர் பழனிவேல் அசோக் நகரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்திற்குள் நுழைவதை விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் தடுத்தனர். விஜயபாஸ்கர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வந்தததுடன் இந்த புதிய நியமனத்தைத் தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே மோதலும் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமைக்கு தனது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் சென்னையில் இருந்தும் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்காமல் புதுக்கோட்டை புறப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் இலுப்பூரில் உள்ள தனது இல்லத்தில் முகாமிட்டுள்ள விஜயபாஸ்கர் தன் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அத்துடன் அதிருப்தியில் இருக்கும் சி.விஜயபாஸ்கர் அதிமுகவில் தொடர்ந்து நீடிக்கலாமா அல்லது தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யலாமா அல்லது வேறு அரசியல் மாற்றங்களை நோக்கிச் செல்வதா என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் விரிவாக ஆலோசித்து வருகிறார்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு எதிராகத் தனியாக செயல்பட்டு வந்த சி.வி. சண்முகம் அணி தற்போது இபிஎஸ் தரப்புடன் தங்களது முரண்பாடுகளைக் களைந்து மீண்டும் இணைந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியுடன் எஸ்.பி. வேலுமணி தரப்பு இணைந்த நிலையில் சி. விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். எஸ் பி வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து இணைந்தனர். இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதை விஜயபாஸ்கர் தவித்தார். இபிஎஸ்ஐ சந்திக்காத போதிலும் சி.விஜயபாஸ்கர் கட்சி கொறடா உத்தரவை மீறியதற்காக சபாநாயகரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தார்.