தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்துள்ள அஜித் குமார் தற்பொழுது தொடர்ந்து கார் பந்தயங்களில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் தயாரிப்பாளர் என்ற புதிய அவதாரமும் எடுத்திருக்கிறார்.
நடிகர் அஜித்குமார்,'அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் LLC' (Ajith Kumar Sports Service LLC) என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ரூ.2.56 லட்சம் தொகை செலுத்தி ஆயுட்கால உறுப்பினர் மற்றும் தயாரிப்பாளர் உரிமம் பெற்றுள்ளார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில்(South Indian Film Chamber of Commerce) பதியப்பட்டுள்ள இந்த நிறுவனம், மோட்டார் ஸ்போர்ட் மற்றும் கார் ரேஸ் சார்ந்த படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரது தயாரிப்பாளர் அவதாரத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
நடிப்பைத் தாண்டி கார் பந்தய ஆர்வத்தின் காரணமாக தற்போது சர்வதேச கார் பந்தயங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித், தனது ரேசிங் தொடர்பான ஆவணப் படங்கள் அல்லது படங்களை இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2023ல் "வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்" என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பையும், கார் பந்தயத்தையும் தொடர்ந்து தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ள நடிகர் அஜித் தற்போது 'குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கத் தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக கார் பந்தயம், துப்பாக்கி சுடுதல் என பல்வேறு துறைகளில் ஆர்வம் காட்டி வரும் அஜித்தின் இந்த முடிவு ஒருவேளை முழு நேர தயாரிப்பாளராக அவர் மாறினால் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.