
மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) பாடப்புத்தகங்களை தயாரித்து அளித்து வருகிறது.
அந்த வகையில் 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்துக்கு என்.சி.இ.ஆர்.டி. இந்த வாரம் புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளது. ‘ஆராயும் சமூகம்-இந்தியா மற்றும் அதற்கு அப்பால்’ என்ற பெயரில் அந்த புத்தகம் வந்துள்ளது. அதில், டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள், மராட்டியர்கள் மற்றும் காலனி ஆட்சிக்காலம் குறித்து முதல்முறையாக மாணவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தின் தொடக்கத்தில், ‘வரலாற்றின் இருண்ட காலகட்டம் பற்றிய குறிப்பு’ என்ற தலைப்பில், போர் மற்றும் ரத்தக்களறி குறித்த வன்முறை நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. கொடூர வன்முறை, மோசமான ஆட்சி, அதிகார வெறி ஆகியவை எப்படி தொடங்கியது என்று மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், கடந்த கால தவறுகளுக்காக இப்போது யாரையும் பொறுப்பாக்கக் கூடாது என்றும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
13-ம் நூற்றாண்டு முதல் 17-ம் நூற்றாண்டு வரையிலான இந்திய வரலாறு அதில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் கொடூரமான, இரக்கமற்ற ஆட்சியாளராக இருந்த பாபர், நகரங்களின் ஒட்டுமொத்த மக்களையும் படுகொலை செய்தார். அவுரங்கசீப், ராணுவ ஆட்சியாளராக இருந்தார். இவர்கள் கோவில்கள் மற்றும் குருத்வாராக்களை அழித்தார் என்றும் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக, அக்கால கட்டத்தில் மத சகிப்புத்தன்மை இல்லாமல் இருந்தது. இருப்பினும், இந்திய சமூகம் அதற்கேற்ப தங்களை நிலைநிறுத்திக்கொண்டு, இடிக்கப்பட்ட கோவில்களையும், நகரங்களையும் மறுநிர்மாணம் செய்தது போன்ற தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளது.
அதே சமயத்தில், மராட்டியர்கள், அஹோம்கள், ராஜபுத்திரர்கள், சீக்கியர்கள் ஆகியோரை பாடப்புத்தகத்தில் உயர்வாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி, தாராபாய், அஹில்யாபாய் ஹோல்கர் ஆகியோர் தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர்களாக வர்ணிக்கப்பட்டுள்ளனர்.
அக்பர் படையை எதிர்த்து போரிட்ட ராணி துர்காவதி, மேவார் மன்னர் மகாராணா பிரதாப் தப்பிய சாகசம், முகலாயர்களுக்கு எதிரான ஜாட் விவசாயிகளின் வீரம் ஆகியவையும் விளக்கப்பட்டுள்ளன.
என்.சி.இ.ஆர்.டி. சமூக அறிவியலுக்கான பாடத்திட்ட பிரிவு தலைவர் மைக்கேல் டேனினோ, முகலாயர்களை தவறாக சித்தரிக்க முயற்சிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மத்திய மந்திரி பி.எல்.வர்மா கூறும் போது, முகலாயர்கள் நம்மை நீண்ட காலம் ஆண்டனர். அடுத்த தலைமுறை அதுகுறித்து கற்றுக்கொள்ள வேண்டும். என்ன நடந்தது என்பதை படிக்க வேண்டும் என்பதற்காக இந்த தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.