அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறளைக் காட்சிப்படுத்த உத்தரவு!

அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறளைக் காட்சிப்படுத்த உத்தரவு!
Updated on

மிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் அனைத்து அலுவலகங்களிலும் தினமும் ஒரு திருக்குறள் மற்றும் தமிழ் கலைச் சொற்களை காட்சிப்படுத்த வேண்டும் என தமிழக அரசு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக, அனைத்துத் துறை தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில், ‘பெரும்பான்மையான அலுவலகங்களில் திருக்குறளும், தமிழ் கலைச் சொற்களும் காட்சிப்படுத்தப்படவில்லை. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திறக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

மேலும், திருக்குறளின் முப்பாக்களில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய அதிகாரங்களில் அதன் பொருளுடனும் தமிழ் ஆட்சிச் சொல் அகராதியில் உள்ள சொற்களில் இருக்கும் ஆங்கிலச் சொல் ஒன்றையும், அதற்குரிய தமிழ் சொல்லையும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்’ என தெரிவித்து இருக்கிறார்.

இந்த சுற்றறிக்கை உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத் துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மேற்படி பணிகள் நடைபெற்று வருவதை கண்காணித்து உரிய அறிக்கையை அரசுக்கு அனுப்புமாறு தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் வளர்ச்சி மண்டல துணை இயக்குநர் / மாவட்ட நிலை அலுவலர்களைக் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com