

தமிழகத்தில் மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்று பாமக ஆகும். இக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக அதிகார மோதல் போக்கு நிலவி வருகிறது. தன் மகன் அன்புமணியின் மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைப்பதும், அதற்கு எதிர்வினையாக அன்புமணியும் ராமதாஸ் மீது குற்றச்சாட்டுகளை முன் வைப்பதும் அரசியலில் வாடிக்கையாகி விட்டது.மேலும், இந்நிகழ்வு,அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸ் vs அன்புமணி :
இந்நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காகப் பாமக இரண்டு அணிகளாகச் செயல்படத் தொடங்கியது. அன்புமணி தரப்பினர் 2026-ல் ஒரு பொதுக்குழுவைக் கூட்டி, அன்புமணிதான் பாமகவின் தலைவராகத் தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றி, அதனைத் தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைத்தனர்.
இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் ராமதாஸ், அவரது தரப்பினரை கொண்டு பொதுக்கூட்டம் ஒன்றை கூட்டி கட்சியிலிருந்து அன்புமணியை பாமக விலிருந்து நீக்கி ஆணையை பிறப்பித்தார்.ஆனால், தமிழக சட்டமன்ற தேர்தலில் அன்புமணி தரப்பு வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆனையம். அதுத் தொடர்பாக கடிதத்தையும் அன்புமணி முகவரிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியது.இதனால் பாமகவின் நிறுவனர் ராமதாஸ் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, அன்புமணிக்கு பாமகவின் மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியதை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பாமக மாம்பழ சின்னம் வழக்கு:
அப்போது அவரளித்த புகாரில், பாமகவின் மாம்பழம் சின்னம் ஒதுக்குவது தொடர்பான கடிதத்தை தன் முகவரிக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என்றுன்ம், அன்புமணி முகவரி அனுப்பிய கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் ராமதாஸ் தெரிவித்து இருந்தார். மேலும் கடந்த ஆண்டு மே மாதத்துடன் பதவிக்காலம் முடிந்த நிலையில் பாமக தலைவராக நீடிப்பதாக போலி ஆவணங்களை அன்புமணி தாக்கல் செய்துள்ளதாகவும் தனது மனுவில் கூறியிருந்தார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இருக்கக் கூடாது என்றும், சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தனக்குத்தான் கடிதம் அனுப்பி இருக்க வேண்டும் என்றும் அம்மனுவில் கூறியுள்ளார்.
மாம்பழம் சின்னத்தை யாருக்கு ஒதுக்காமல் முடக்குவோம் என டெல்லி நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால், இதுவரை சின்னத்தை முடக்கவில்லை. எனவே தேர்தல் கமிஷன் கடந்த ஜூலை 30 அனுப்பிய கடிதத்தை ரத்து செய்ய வேண்டும்என்றும் தன் மனுவில் கூறியிருந்தார்.
இதற்கிடையே, தேர்தல் ஆணையம் ஒதுக்கிய பாமக சின்னத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அன்புமணி 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். அப்போது அவருக்கு 17 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியானது. ஆனால், ராமதாஸ் அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டணி வைக்கமுடியாமல் சிக்கலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எம். எம் .ஸ்ரீ. வஸ்வா, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
பாமகவின் 'மாம்பழம்' சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது குறித்து மூன்று வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி அமர்வு, இந்த விவகாரத்தில் ஆணையம் தனது நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்தச் சின்னம் யாருக்குச் சொந்தம் என்பதில் நிலவும் சட்டப் போராட்டத்திற்கு இந்த உத்தரவு ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
இந்த விசாரணையின் போது, அன்புமணி ராமதாஸ் தரப்பினர் தங்கள் தரப்பு வாதங்களைக் முன்வைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் தலையிட முயன்றனர். இருப்பினும், அவர்கள் இந்த வழக்கில் அதிகாரப்பூர்வமாக 'எதிர் தரப்பாக' சேர்க்கப்படாத நிலையில், வாதாட அனுமதி அளிக்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால் அன்புமணி தரப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மூன்று வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தந்தை மற்றும் மகன் இடையேயான இந்த அதிகார மோதல் பாமகவின் உள்நாட்டுப் பூசலை சட்டரீதியான போராட்டமாக மாற்றியுள்ளது. தேர்தல் ஆணையம் அளிக்கப்போகும் பதில், கட்சியின் ஒற்றுமை மற்றும் 2026 தேர்தலுக்கான கூட்டணி வியூகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மாம்பழம் சின்னம் முடக்கப்படுமா அல்லது குறிப்பிட்ட ஒரு தரப்பிற்குச் செல்லுமா என்பது தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தைப் பொறுத்தே அமையவுள்ளதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.