‘என்எல்சி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது’ அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

‘என்எல்சி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது’ அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது என்எல்சி நிர்வாகத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்காக சுமார் 7000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டபோது அதற்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தியது. ஆனால், தற்போது ஆளுங்கட்சியாக திமுக இருக்கும்போது, என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்காக அரசே நிலங்களை கையகப்படுத்தித் தருவதை திமுகவின் இரட்டை வேடமாகவே பார்க்க வேண்டி உள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கடலூர் மாவட்டத்தில் வேளாண் விளைநிலங்களை பறிப்பதற்கு எதிராக உழவர்களும், மக்களும் தொடர் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், என்எல்சி1, 1ஏ ஆகிய சுரங்கங்களின் விரிவாக்கத்துக்காக மீண்டும் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தை நாசமாக்கும் என்எல்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணைபோவது கண்டிக்கத்தக்கது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தொகுதிக்குட்பட்ட அம்மேரி, குறிஞ்சிப்பாடி வட்டம் தென்குத்து, தொப்பிலிக்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள பல நூறு ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளை நாளிதழ்கள் வாயிலாக தமிழக அரசின் தொழில்துறை வெளியிட்டு இருக்கிறது.

கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை என்எல்சி நிறுவனம் ஏற்கெனவே பறித்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், தற்போது மீதமுள்ள நிலங்களையும் பறிக்க என்எல்சி துடிப்பதும், அதற்கு தமிழக அரசு துணைபோவதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல இருக்கிறது. 1956ம் ஆண்டில் தொடங்கி இப்போது வரை 37,256 ஏக்கர் நிலங்களை என்எல்சி நிறுவனத்துக்கு தமிழக அரசு பறித்துக் கொடுத்திருக்கிறது. இந்த நிலங்கள் கிட்டத்தட்ட 25 ஆயிரம் குடும்பங்களுக்கு சொந்தமானவை. பறிக்கப்பட்ட நிலங்களை வைத்திருந்த 25 ஆயிரம் குடும்பங்களும் கௌரவத்துடனும், பொருளாதார தன்னிறைவுடனும் வாழ்ந்து வந்தனர். நிலங்கள் பறிக்கப்பட்ட பிறகு அவர்கள் நாடோடிகளாகவும், உள்நாட்டு அகதிகளாகவும் மாற்றப்பட்டுவிட்டனர். அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டு, கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அதோடு, அவர்கள் வாழ்வதற்கு மாற்று இடங்களும் வழங்கப்படவில்லை; நிலங்களைக் கொடுத்த 25 ஆயிரம் குடும்பங்களில் 1,827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் நிலம் கொடுத்தவர்களில் ஒருவருக்குக் கூட வேலை வழங்கப்படவில்லை. மாறாக, என்எல்சி நிறுவனம் கோடி கோடியாக லாபம் ஈட்டி வெளிமாநிலங்களில் முதலீடு செய்து வருகிறது.

என்எல்சிக்காக இப்போது பறிக்கப்படவிருக்கும் நிலங்களின் உரிமையாளர்களுக்கும் இதே நிலைதான் ஏற்படப்போகிறது. இதற்கு தமிழக அரசு துணை போகலாமா? என்பதுதான் வினா. ஒரு மாநில அரசு வல்லூறுகளிடமிருந்து குஞ்சுகளைக் காக்கும் கோழியைப் போல செயல்பட வேண்டும். வல்லூறுகளிடம் மோதி வெல்லும் வலிமை கோழிகளுக்குக் கிடையாது. ஆனாலும், தமது பிள்ளைகளுக்கு ஆபத்து என்று தெரிந்தவுடன், கோழிகள் வீறு கொண்டு எழுந்து வல்லூறுகளை எதிர்த்து போராடும். அதற்குப் பெயர்தான் பொறுப்புடைமை. அந்தப் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்க வேண்டும். என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தித் தரும்படி மத்திய அரசே கடும் நெருக்கடி கொடுத்தாலும், அதற்கு பணியாமல் உழவர்களையும், அவர்களின் வேளாண் விளைநிலங்களையும் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால் தமிழக அரசோ, அதன் கடமைகளையும், பொறுப்புகளையும் மறந்து விட்டு என்எல்சிக்கு அடிமையாக தொண்டூழியம் செய்து கொண்டிருக்கிறது.

என்எல்சி நிறுவனத்தால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் இல்லை. என்எல்சியால் தமிழகத்துக்கும் குறிப்பாக, கடலூர் மாவட்டத்துக்கும் ஏற்பட்ட பாதிப்புகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. என்எல்சி நிறுவனம் கேட்டவுடன் தனது அதிகாரங்கள் அனைத்தையும் பயன்படுத்தி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, உழவர்களின் நிலங்களைப் பறித்துத் தருவது மக்களுக்கு செய்யும் துரோகம். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தது. சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்காக சுமார் 7000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டபோது அதற்கு எதிராக போராட்டங்களை நடத்தியது. ஆனால், இப்போது என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்காக அரசே நிலங்களை கையகப்படுத்தித் தருவதை திமுகவின் இரட்டை வேடமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

என்எல்சி நிறுவனத்துக்காக தமிழக அரசால் கையகப்படுத்தித் தரப்படவுள்ள நிலங்கள் அனைத்தும் முப்போகம் விளையும் நிலங்கள். பொன்விளையும் பூமியை கடலூர் மாவட்ட மக்களிடமிருந்து பறிப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. ஒரு பிடி மண்ணைக் கூட விட்டுத் தராது. ‘மக்களின் பக்கம் நில்லுங்கள்... மண்ணை நாசமாக்கும் பெரு நிறுவனங்களுக்கு துணை போகாதீர்கள் என தமிழக அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பறித்தும் கடலூர் மாவட்ட மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்பதாலேயே, அவர்கள் அனைத்து நிலப்பறிப்புகளை பொறுத்துக்கொள்வர் என்று நினைக்க வேண்டாம். அவர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு. அந்த எல்லை கடந்தால் மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும். இதை தமிழக அரசு உணர வேண்டும். நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும். என்எல்சி நிறுவனத்தை தமிழகத்தை விட்டு வெளியேற்றத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அந்த அறிக்கையில் அவர் கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com