ஆட்சிக்கு வராமலேயே நிறைய சாதித்திருக்கிறோம் - பா.ம.கவின் 35வது தொடக்கவிழாவில் அன்புமணி பேச்சு!

ஆட்சிக்கு வராமலேயே நிறைய சாதித்திருக்கிறோம் - பா.ம.கவின் 35வது தொடக்கவிழாவில் அன்புமணி பேச்சு!

ஆட்சி, அதிகாரத்திற்கு வராமலேயே தமிழ்நாட்டு மக்களுக்குகாக நிறைய சேவைகளை செய்து சாதித்திருக்கிறோம். ஆட்சிக்கு வந்தால் இன்னும் நிறைய செய்வோம் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பா.ம.க கட்சிக் கொடிகளையும் ஏற்றி வைத்து பா.ம.கவின் தொடக்க விழாவில் பங்கேற்றிருக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 35-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பா.ம.க செல்வாக்குடன் உள்ள பகுதிகளில் கட்சிகொடியேற்றி, இனிப்புகளை வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.  வட தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஸ்ரீவைகுண்டம் போன்ற தென் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் பா.ம.கவின் தொடக்கவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பா.ம.கவினர் ஏற்பாடு செய்துள்ள விழாவில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதஸ், ஆட்சிக்கு வராமலேயே மக்களுக்கு நிறைய சேவை செய்ய முடிந்திருக்கிறது என்றும் மக்கள் வாய்ப்பளித்தால் இன்னும் நிறைய விஷயங்களை செய்ய முடியும் என்றார்.  பொது சிவில் சட்டம், நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

பா.ம.க.வில் பொருளாளர் பதவி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. சிறுபான்மையினர்களின் உரிமைகளை காப்பதற்கு பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பா.ம.க என்னும் கட்சி  தொடங்கப்பட்ட நாளில் இருந்தே இஸ்லாமியர்கள் நலன் மீது தொடர்ந்து அக்கறை செலுத்து வருகிறோம்.

ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவது இந்தியாவின்  தனித்துவமான அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்து விடும். இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தியாவின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தி.மு.கவும் அ.தி.மு.கவும் நீர் மேலாண்மை குறித்து சரியாக கவனம் செலுத்தவில்லை என்று குறிப்பிட்ட அன்புமணிராமதாஸ்,  கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என நீண்ட ஆண்டுகளாக விவசாயிகளும், பா.ம.க.வும் வலியுறுத்தி வருகிறது. 10 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பதே பா.ம.க. நிலைப்பாடாகும் என்று தெரிவித்துள்ளார்.

விவசாய பயன்பாட்டில் இருந்த 4 லட்சத்து 42 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வேறு சில பயன்பாட்டிற்கான நிலமாக மாற்றப்பட்டுள்ளது. 48 சதவீதம் விவசாய நிலங்கள் தற்போது 38 சதவீதமாக குறைந்துவிட்டன. கடந்த 50 ஆண்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் பாசன வசதிக்கு எந்த திட்டமும் கொண்டு வராததே காரணம் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com