‘மகளிர் உரிமைத்தொகை பற்றிப் பேச அண்ணாமலைக்கு என்ன அருகதை உள்ளது?’ உதயநிதி காட்டம்!

‘மகளிர் உரிமைத்தொகை பற்றிப் பேச அண்ணாமலைக்கு என்ன அருகதை உள்ளது?’ உதயநிதி காட்டம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

சென்னை திருவல்லிக்கேணி, பெசன்ட் சாலை என்கேடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்க்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 896 மாணவ, மாணவியர்க்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், ‘தமிழக ஆளுநருக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இந்தக் கடிதத்துக்கு குடியரசுத் தலைவர் எந்த பதிலும் தரவில்லை என்றால் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்’ கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, ‘அதுகுறித்து முதலமைச்சர் முடிவு செய்வார்’ என்று கூறினார்.

அதற்கடுத்து, ‘பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 80 சதவிகிதப் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது என்று கூறியுள்ளாரே அது பற்றி…’ என்று கேட்கப்பட்டதற்கு, ‘ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அனைவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்று சொன்னார்கள். ஆனால், 15 ரூபாயாவது கொடுத்தார்களா? மகளிர் உரிமைத்தொகை பற்றிப் பேச ஒரு அருகதை வேண்டும். மக்களை ஏமாற்றும் பாஜகவினருக்கு மகளிர் உரிமைத் தொகை பற்றிப் பேச எந்த அருகதையும் கிடையாது” என்று காட்டமாகப் பேசினார்.

logo
Kalki Online
kalkionline.com