

தமிழக அரசியலில் கடந்த ஒரு சில தினங்களாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியை விட்டு விலகுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அண்ணாமலையும் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு இரண்டு நாட்கள் பொறுமையாக இருக்கும் படி கேட்டுக் கொண்டார்.மேலும் அவர் பாஜகவை விட்டு விலகி புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாக செய்திகள் பரவி வந்தது. இந்த கட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்தன.
இந்நிலையில் இன்று டெல்லி சென்ற அண்ணாமலை பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் நபீனை சந்தித்து 5 பக்க விளக்க கடிதம் மற்றும் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். பாஜகவில் இருந்து தான் விலகுவதாக அதில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அண்ணாமலை கர்நாடகாவில் புகழ்பெற்ற ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து பின்னர் பாஜகவில் இணைந்து , தமிழக பாஜகவின் தலைவர் ஆனார். அண்ணாமலை வரவிற்கு பின்னர் பாஜகவிற்கு இளைஞர்களின் வரவு அதிகரித்தது.
எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளரான பின்னர் அண்ணாமலைக்கு எதிரான போக்கை கடைபிடித்தார். அண்ணாமலையும் பொதுவெளியில் எடப்பாடி பழனிச்சாமி மிகக் கடுமையாக விமர்சித்ததால் அதிமுகவுடன் கூட்டணி உடைந்தது.
பின்னர் அண்ணாமலை தலைவராக இருந்தால் கூட்டணிக்கு வர முடியாது, என்று அதிமுக பிடிவாதம் பிடித்ததாக சில செய்திகள் வெளியாகின. இதன் காரணமாக அதிமுக கூட்டணிக்காக நயினார் நாகேந்திரன் பாஜகவின் தமிழக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் அண்ணாமலை தொடர்ச்சியாக கட்சியில் ஓரங் கட்டப்பட்டிருந்தார். இறுதியாக நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலிலும், அண்ணாமலை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதால் கட்சியில் இருந்து விலக முடிவை அவர் எடுத்ததாக தெரிகிறது.
சில நாட்களாகவே அண்ணாமலை தனி கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஆயினும் இன்று பாஜகவின் தேசியத் தலைவரை சந்தித்து, முறைப்படி அண்ணாமலை ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இன்று மதியம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் பொழுது அமித்ஷாவிற்கு அண்ணாமலை பாரதியார் புத்தகத்தை அன்பளிப்பாக அளித்துள்ளார்.
அமித் ஷா உடனே சந்திப்பு நிறைவடைந்த பின்னர் , தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை உடனடியாக டெல்லிக்கு வரச் சொல்லி தலைமை உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்திகள் இன்று அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக வைத்திருக்கின்றன. அண்ணாமலை பாஜகவை விட்டு விலகியதாக இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தலைமையின் அழைப்பை அடுத்து நையினார் நாகேந்திரன் உடனடியாக டெல்லி செல்ல உள்ளார்.
அண்ணாமலை பாஜக விட்டு விலகுவாரா? அல்லது தலைமை அவரை சமாதானம் செய்து மீண்டும் கட்சிப் பணி வழங்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.