‘அண்ணாமலைக்கு நடை பயணத்தால் கால் வலிதான் மிச்சமாகும்’ அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

‘அண்ணாமலைக்கு நடை பயணத்தால் கால் வலிதான் மிச்சமாகும்’ அமைச்சர் ரகுபதி விமர்சனம்!
Updated on

மிழ்நாட்டில் பாஜகவை பலப்படுத்தும் விதமாகவும், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு விளம்பரம் தேடும் முயற்சியாகவும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த நடை பயணத்தின் வழி நெடுகிலும் அவர் திமுகவின் ஊழல் மற்றும் திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இன்று மாலை ராமேஸ்வரத்தில் தொடங்கும் அண்ணாமலையின் இந்த நடை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.

இந்த நிலையில், இன்று புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு செய்தார். அப்போது இந்தத் திட்டம் குறித்து குடும்பத் தலைவிகளிடம் அவர் பல்வேறு கருத்துக்களைக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எங்கள் மீது எவ்வளவு ஊழல் பட்டியல் வெளியிட்டாலும் அது திமுகவை எந்த விதத்திலும் பாதிக்காது. அரசியல் கட்சிகள் அனைத்தும் நடத்துகின்ற நடை பயணம் போன்றுதான் அண்ணாமலையின் நடை பயணமும்‌.

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடை பயணத்தில் ஒரு எழுச்சி இருந்தது. அண்ணாமலை நடை பயணம் குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கூட்டத்தை சேர்க்கிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம். அண்ணாமலையின் இந்த நடை பயணத்தால் அவருக்குக் கால் வலிதான் மிச்சமாகும். வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேபோல், எந்த விதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை” என்றார். இதைப்போலவே, தமிழகத்தின் ஒருசில அரசியல் கட்சித் தலைவர்களும் அண்ணாமலையின் இந்த நடை பயணத்தை விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com