

இன்று முதல் வி த லீடர் (We The Leader) என்ற புதிய அரசியல் இயக்கம் துவங்குவதாக அண்ணாமலை அறிவித்தார்.
பாஜகவின் முக்கிய முகவரியாக தமிழகத்தில் இயங்கி வந்த முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை ராஜினாமா செய்து அதிலிருந்து விலகியது முதல் அரசியல் களத்தில் அவர் எடுக்கும் முடிவு மீதான ஆர்வம் இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று சமூகவலைத்தளத்தில் நேரலை மூலம் பாஜக மீதுள்ள தனது நிலைப்பாடு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசி பல விளக்கங்களை அவர் அளித்துள்ளார். மேலும் வீ த லீடர் எனும் புதிய இயக்கத்தை துவங்கியுள்ளார்.
ஆன்லைன் மூலமாக அண்ணாமலை இயக்கத்தில் பலர் சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக அவர் www.wetheleader.org எனும் வெப்சைட் முகவரியைத் தந்து இதில் ஆர்வமுள்ளவர்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்த ஒரு மணி நேரத்தில் 1 லட்சம் பேர் இணைந்தது ஆச்சரியம் அளிக்கும் விஷயமாகிறது.
இவரது புதிய இயக்கத்தில் இணைய ஏன் மக்கள் இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனர்?
ஏற்கனவே மக்கள் இவரது அதிரடிப் பேச்சால் ஈர்க்கப்பட்டாலும் இவர் சார்ந்துள்ள கட்சியைக் கருத்தில் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது புதிய இயக்கத்தில் இணையும் முழு சுதந்திரம் இவரது ரசிகர்களுக்கு கிடைத்துள்ளதும் ஒரு காரணம் எனலாம்.
அதே நேரம் நேரலை மூலம் அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அப்துல் கலாம் பெயரில் கோவையில் அரசியல் மரபு நிறுவனம் உருவாக்க உள்ளதாகவும் சட்டப்பேரவைத் துவங்கி ஊராட்சி வரை சிறப்பான நிர்வாகம் சுத்தமான நிர்வாகம் தமது பாதை என்றும் சாமானிய மக்களுக்கான பாதையாக அரசியலில் வருவோருக்கு அப்துல் கலாம் அரசியல் நன்னெறி மையத்தில் முன் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் பின்னர் ஈடுபடும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாகரிகமாக அரசியலை முன்னெடுப்போம், பொறுமையாக நிதானமாக செயல்படுவோம், யாரும் நம்முடைய எதிரிகள் அல்ல யாரிடமும் வன்மம் கிடையாது எல்லோரும் சேர்ந்து ஒரு புரட்சியை மாற்றத்தை கொண்டு வருவோம்.எனது கட்சியில் யாருக்கும் எந்த பதவியும் நிரந்தரமல்ல. தமிழ்நாட்டில் நிறைய தலைவர்களை உருவாக்க வேண்டி உள்ளது . தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.
தமிழகத்தை இந்தியாவில் முதல் மாநிலமாக கொண்டு வருவதை நமது லட்சியம் திறமைகளை மேம்படுத்தி அரசியலில் பயன்படுத்த வேண்டும் . வளர்ந்த பாரதம் எனும் கனவோடு அரசியல் இயக்கம் துவங்கியுள்ளேன் சாமானிய மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க உள்ளோம் என அவர் கூறியிருப்பது தற்போது நிலவும் அரசியல் குழப்பங்கள் இடையே பலருக்கும் அரசியல் தெளிவைத் தந்திருக்கும் என்பதாலேயே இந்த ஏகோபித்த ஆதரவு அண்ணாமலையின் புதிய இயக்கத்துக்கு கிடைக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மேலும் தற்போது பெருகிக் கொண்டு இருக்கும் சமூக வலைதளங்களில் அரசியல் மோதல்கள் குறித்தும் மறைமுகமாக சமூக வலைதளங்களில் ஆரோக்கியமான முறையில் அரசியல் செய்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளதும் அரசியல் ஒரு குடும்பத்திற்கானது அல்ல அனைவருக்கும் பங்கு இருக்கிறது என அவர் அழைத்தவிதமும் இவ்வளவு பேர் உடனடியாக அதில் இணையக் காரணமாக இருக்கலாம்.
இனி வரப்போகும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கும் நிலையில் இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர் மக்களும்.