அன்னூர் தொழிற்பேட்டை: சாகும் வரை உண்ணாவிரதம் என அண்ணாமலை அறிவிப்பு!

அண்ணாமலை
அண்ணாமலை
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தினால், அதை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக 5 ஊராட்சிகளில் 3,731ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்த அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அன்னூர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அன்னூர் பேருந்து நிலையம் அருகே பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

அன்னூரில் விவசாய நிலங்களை பிடுங்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்க தமிழக அரசு முயற்சிகிறது. அதை பாஜக ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

தமிழக அரசு அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலத்தில் ஒரு பிடி மண் எடுத்தாலும் நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். அதிகாரிகள் மூலம் போராட்டத்தை முடித்து விடலாம் என நினைத்து விடாதீர்கள் ஒட்டு மொத்த அதிகார மையமும் சேர்ந்து வந்தாலும், நாங்கள் சிறைக்கு சென்றாலும், இந்த பிரச்சினையை சும்மா விட மாட்டோம். அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க அனுமதிக்க மாட்டோம்.

-இவ்வாறு அண்ணாமலை பேசினார். 

logo
Kalki Online
kalkionline.com