மத்திய அரசுத் துறைகளில் 71,000 பேருக்கு பணி நியமன ஆணை - பிரதமர் மோடி!

மத்திய அரசுத் துறைகளில் 71,000 பேருக்கு பணி நியமன ஆணை - பிரதமர் மோடி!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மத்திய அரசுத் துறைகளில் சேர தேர்வு செய்யப்பட்ட 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் வழங்கினார்.

ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் மத்திய அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள 71,000 பேருக்கு பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கி உரையாற்றினார். அஞ்சலக ஆய்வாளர்கள், தட்டச்சர், தீயணைப்ப ஊழியர், ஆடிட்டர், பட்டதாரி ஆசிரியர், உதவிப் பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

மத்திய அரசின் ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் பத்து லட்சம் பேருக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

அதன்படி, தற்போது பல்வேறு கட்டங்களாக மத்திய அரசு பணிகளுக்கு நியமிக்கப்படுவோருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்று நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்று மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

நாடு முழுவதும் 45 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுத் துறைகளின் ஆதரவுடன் இந்தப் பணியாளர் சேர்ப்பு நடைபெறுகிறது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தபால் துறை ஊழியர், தபால் துறை ஆய்வாளர், வணிக எழுத்தர் மற்றும் பயணச்சீட்டு பரிசோதகர், இளநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், இளநிலை கணக்கு எழுத்தர், தண்டவாளப் பராமரிப்பாளர், உதவிப் பிரிவு அலுவலர், இளநிலை எழுத்தர், துணைப் பிரிவு அலுவலர், வரி உதவியாளர்கள், உதவி அமலாக்கத் துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள், செவிலியர் அதிகாரிகள், உதவி பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு வீரர், உதவி கணக்கு அதிகாரிகள், உதவி தணிக்கை அதிகாரி, பிரிவு கணக்காளர், தணிக்கையாளர், காவலர், தலைமை காவலர், உதவி கமாண்டன்ட், முதல்வர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், உதவி பதிவாளர், உதவி பேராசிரியர் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

logo
Kalki Online
kalkionline.com