

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் படிப்படியாக வெப்பநிலை உயர்ந்து வெப்ப அலை வீசும் எனவும் மக்கள் பாதுகாப்புகளை கடைபிடித்து வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான வானிலை நிலவரம் குறித்த அறிவிப்பை இந்திய வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ளது.
அதில் தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் ஏப்ரல் மாதத்தில் படிப்படியாக அதிகரிக்கும். இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.தமிழகத்தின் வடக்கு மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 5 முதல் 7 நாட்கள் வரை 'வெப்ப அலை' வீசக்கூடும். இதன் காரணமாக 'வெப்ப அழுத்தம்' (Heat Stress) அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மேலும் ஒரு சில நாட்கள் மழை பெய்யும் வாய்ப்பு இருந்தாலும், வெப்பத்தின் தாக்கமே அதிகம் இருக்கும் என்பதால் பொதுமக்கள் அவசியமின்றி நண்பகல் வேளைகளில் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்.
வானிலை மையத்தின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாமல், அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் உடலில் ஏற்படும் நீரிழப்பைத் (Dehydration) தடுத்து, வெப்ப அனலிலிருந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை பாதுகாக்க முடியும்.குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் வசிப்போர் நீண்ட நேரம் நேரடி வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.