மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படத்தில் இடம்பெற்ற "வீர ராஜா வீரா" பாடல், தாகர் சகோதரர்களின் 'சிவா ஸ்துதி' இசைக் கோர்வையை அடிப்படையாகக் கொண்டது என்ற சர்ச்சை நீண்ட நாட்களாக நிலவி வந்தது.இது தொடர்பான வழக்கில் தற்போது ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் வரும் "வீர ராஜா வீரா" என்ற பாடலின் இசையமைப்பு தன்னுடைய தந்தை ஃபயாசுதீன் தாகர் மற்றும் மாமா ஜாஹிருதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட சிவா ஸ்துதி பாடலிலிருந்து நகலெடுக்கப்பட்டதாக பாரம்பரிய பாடகர் உஸ்தாத் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர், அதற்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.
ஏப்ரல் 2025-ல் தில்லி உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி பொன்னியின் செல்வன் படத்தின் வீர ராஜா வீரா பாடல் சிவா ஸ்துதியால் ஈர்க்கப்பட்டு அதன் உந்துதலால் பாடலை இயற்றியுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதை பதிவு செய்து, காப்புரிமை மீறல் தொடர்பாக 2 கோடி ரூபாய் தொகையை தில்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு, மேலும் அந்தப் பாடலுக்காக ஜூனியர் தாகர் சகோதரர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட அந்த உத்தரவை எதிர்த்து ஏ. ஆர். ரஹ்மான் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை பரிசீலித்த தில்லி உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. இதற்கு எதிராக ஜனவரி 3ஆம் தேதி தாகர் சகோதரர்கள் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தின் "வீர ராஜா வீராா" பாடலில், தாகர் சகோதரர்களின் "சிவா ஸ்துதி" இசையைப் பயன்படுத்தியதற்காக, அந்த பாரம்பரியத்திற்கு உரிய அங்கீகாரம் அளிப்பதாக இசையமைச்சர் ஏ.ஆர்.ரகுமான் தரப்பு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. இப்பாடல் தாகர்வாணி மரபினால் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ள ரஹ்மான் தரப்பு, இது சட்ட ரீதியான தப்பு ஒப்புதல் அல்ல மாறாக இசை மரபை மதிக்கும் செயல் என்று விளக்கம் அளித்துள்ளது.
"வீர ராஜா வீரா" பாடல், லேட் உஸ்தாத் நாசிர் ஃபயாசுதீன் தாகர் மற்றும் உஸ்தாத் நாசிர் ஜாஹிருதீன் தாகர் (ஜூனியர் தாகர் சகோதரர்கள்) பாடிய "சிவா ஸ்துதி" என்ற 'தாகர்வாணி' பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டது என்பதைப் பாடலின் வரவுகளில்(credits) சேர்க்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் தாகர் குடும்பத்தினரின் இசை பாரம்பரியத்தை கௌரவிக்க உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்டது. ஆனால் பதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டை ரஹ்மான் தரப்பு தொடர்ந்து மறுக்கிறது.
5 வாரங்களுக்குள் அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இதை திருத்தம் செய்ய அதாவது புதுப்பிக்க ஏ.ஆர்.ரஹ்மான் உறுதியளித்தார். இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் முடித்து வைத்தனர். எனினும் இந்த விவகாரம் தொடர்பான சிவில் வழக்கு தொடரும் என்றும், இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டாலும், தாகர் குடும்பத்தினர் தொடர்ந்த பதிப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ரஹ்மான் தரப்பிலிருந்து 2 கோடி வைப்புத்தொகை தில்லி உயர்நீதிமன்ற பதிவாளரிடம் கொடுக்கப்பட்டது அங்கேயே இருக்கும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர். ரஹ்மான் விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி இசைக்கோர்வையை இயற்றியது யார்? அதன் காப்புரிமை மீறல் குறித்த கேள்விகளுக்கு இன்னும் விடை காணப்படவில்லை. உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதின் பேரில் மட்டுமே இசைக் கோர்வைக்கான அங்கீகாரத்தை தான் வழங்க ஒப்புக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.