ஆட்சி கவிழ்ந்தால் தேர்தலை சந்திக்க நாங்கள் தயார்! திமுக தயாராக உள்ளதா? – அமைச்சர் அருண்ராஜ்

நாங்கள் 5 இலட்சம் 25லட்சம் மட்டுமே செலவு செய்து அமைச்சர் ஆகியுள்ளோம்! –அருண்ராஜ்
Arunraj against DMK
Arunraj and dmkimage credit: Polimer News
Updated on

இன்று சென்னையில் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் அருண் ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ள பல்வேறு வசதிகளைப் பற்றி விரிவாக குறிப்பிட்டார். அப்போது ஊடகவியலாளர் "ஆறு மாத காலத்திற்குள் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று திமுகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்" இது பற்றி உங்களது கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பினர்

இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ் "அவர்கள் அவ்வாறு தான் கூறி வருகின்றார்கள். ஆட்சி கவிழ்ந்தால் உடனடியாக தேர்தல் வரும், தேர்தல் வந்தால் அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தேர்தலை சந்திக்க அவர்கள் தயாராக இருக்கிறார்களா? என்று கேளுங்கள். ஒருவேளை அவ்வாறு நடந்தால் , அப்படி நடப்பதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை.

கண்டிப்பாக 5 ஆண்டுகள் இந்த ஆட்சி நீடிக்கும். ஒருவேளை எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்கக்கூடிய ஆற்றல் நம்மிடம் இருக்கிறது. ஏனென்றால் நம்மிடம் எந்த ஒரு காசும் இல்லை. நாங்கள் எல்லாம் (தவெக) 5 லட்சம், 25 லட்சம் எல்லாம் செலவு செய்து அமைச்சராகி உள்ளோம். ஆனால் அவர்கள் எவ்வளவு செலவு செய்து இருப்பார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். தேர்தலில் நின்றால் மீண்டும் வெல்லும் நம்பிக்கை இருக்கா? தேர்தலில் போட்டியிட துணிச்சல் இருக்கிறதா? என்று அவர்களிடம் கேட்டு சொல்லுங்கள்.

அதிமுக 108 இடங்களில் டெபாசிட் இழந்தது பற்றி உங்களது கருத்து என்ன? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் அருண் ராஜ் " அது தவறான செய்தி வந்தது. அது தவறு தான். என்று கூறி விடைபெற்று விட்டார்.

திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூன்று மாதத்திற்குள் இந்த அரசாங்கம் கவிழ்ந்து விடும் என்று கூறியிருந்தார். அதை தொடர்ந்து திமுகவை அரசியல் பிரமுகர்கள் பலரும் இந்த கருத்தை பொதுவெளியில் முன் வைத்தனர்.

இன்று , இதற்கு விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு " தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்து ஒரு மாதம் தான் ஆகிறது. ஆனால் , அதற்குள் எங்கு பார்த்தாலும் கொலை ,கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருள் நடமாட்டம் ஆகிய குற்ற சம்பவங்கள் தான் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு குற்ற சம்பவங்களில் ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர்களே ஈடுபட்டு வருகின்றனர்.

தவெக கட்சியை சேர்ந்த பெண் ஒருவர், அந்தக் கட்சி உறுப்பினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்டிருந்தார். பின்னர் இது சம்பந்தமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டிய ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், குற்றம் சாட்டியிருந்த பெண்ணை கட்சியை விட்டு நீக்கி இருக்கிறது. இதுதான் தூய சக்தி என்று கபட வேடம் போடும் இந்த அரசு.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சியை ஆறு மாத காலம் விமர்சிக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தார். ஆனால், நிலைமை மிக மோசமாக செல்வதால் அவர் விமர்சனம் செய்யும் கட்டாயத்துக்கு வந்தார்.

ஆட்சி கவிழ்ப்பு திமுகவின் குறிக்கோள் அல்ல. ஆறு மாதங்கள் அல்ல மூன்று மாதங்கள் கூட இந்த ஆட்சி தாங்காது" என்று தான் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதை திரித்து ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன, என்று அவர் பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக தான் அமைச்சர் அருண்ராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

logo
Kalki Online
kalkionline.com