

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் 111 இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கிடையே கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார்.
தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 80407 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 72,321 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்துள்ளார்.
தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு தனது தொடக்க காலத்தில் திமுக-வில் இருந்தவர். பின்னர், திமுக-வில் இருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார். திமுக-வில் வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த அவர், அதிமுக-விலும் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்தார். எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து மோதலைத் தொடர்ந்து அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. பின்னர், அவர் கடந்த பிப்ரவரியில் விஜய் முன்பு தவெக-வில் இணைந்தார்.