

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் மாகாணத்தில் குயின் டாலப் கடற்கரை உள்ளது. ஜோவான் ஆப்பல்பீ என்ற 47 வயது பெண் தனது மூன்று குழந்தைகளான ஆஸ்டின் (13), பியூ (12), மற்றும் கிரேஸ் (8) ஆகியோருடன் விடுமுறையைக் கழிக்கச் சென்றுள்ளார். 'பேடில் போர்டு' எனப்படும் துடுப்புடன் கூடிய நீண்ட பலகையில் அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது, வீசிய பலத்த காற்றினால் அனைவரும் கரைக்கு அப்பால் 4 கி.மீ. தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது எழுந்த ராட்சத அலைகளால் நான்கு பேரும் கடலில் விழுந்தனர். செய்வதறியாது தவித்த அந்தத் தாய், தனது 13 வயது மகன் ஆஸ்டினிடம் எப்படியாவது கரைக்குச் சென்று உதவிக்கு யாரையாவது அழைத்து வருமாறு கூறியுள்ளார்.
தன் தாய், தம்பி மற்றும் தங்கையை எவ்வாறாவது காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் ஆஸ்டின் கடலில் நீந்தத் தொடங்கினான். முதல் இரண்டு மணி நேரம் 'லைப் ஜாக்கெட்' (உயிர் காக்கும் கவசம்) அணிந்து நீந்திய அவன், அது தடையாக இருந்ததால் அதைக் கழற்றி வீசிவிட்டு, மேலும் இரண்டு மணி நேரம் என மொத்தம் 4 மணி நேரம் கடும் அலைகளுக்கு மத்தியில் நீந்தி கரையை அடைந்தான்.
பிறகு தன் தாயின் கைப்பையில் இருந்த கைபேசி மூலம் அவசர உதவி மையத்திற்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இறுதியில், கரையிலிருந்து 14 கி.மீ. தொலைவில், சுமார் 10 மணி நேரமாக ஒரே 'பேடில் போர்டைப்' பிடித்துக் கொண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிறுவனின் குடும்பத்தினரை மீட்டனர்.
அனைவரும் லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததாலேயே இவ்வளவு நேரம் கடலில் உயிர் பிழைக்க முடிந்தது. 13 வயது சிறுவன் ஆஸ்டினின் இந்த அசாத்திய முயற்சியை ஆஸ்திரேலிய மக்கள் "சூப்பர் ஹியூமன்" (Super Human) என்று பாராட்டி வருகின்றனர்.
"நான் ஒன்றும் ஹீரோ இல்லை; நான் செய்ய வேண்டிய கடமையைச் செய்தேன்" என ஆஸ்டின் பெருந்தன்மையுடன் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆபத்தில் உதவவும், கடமையைச் செய்யவும் வயது ஒரு தடை இல்லை என்பதை இந்த ஆஸ்திரேலியச் சிறுவன் உலகிற்கு உணர்த்திவிட்டான்.