

சென்னையில் உள்ள கிண்டி சிறுவர் பூங்காவில் இரு தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து 20 பறவைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், பூங்காவில் உள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பார்வையாளர்களுக்குத் தொற்று பரவாமல் தடுக்கவும், பூங்காவில் உள்ள மற்ற விலங்குகள் மற்றும் பறவைகளைப் பாதுகாக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பூங்கா மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
மேலும் சிறுவர் பூங்காவைச் சுற்றியுள்ள மரங்கள் அதிகம் காணப்படும் அடையார், மயிலாப்பூர், டி.நகர், வேளச்சேரி போன்ற பகுதிகளில் உள்ள பறவைகளைத் தீவிரமாகக் கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், பறவை காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும். பாதிக்கப்பட்ட பறவைகளிடமிருந்து மற்ற பறவைகளுக்கு பரவுவதால் இறந்த பறவைகளை பரிசோதனை செய்வதன் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நோயானது 99.9 சதவீதம் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை. எனவே, பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அசாதாரண பறவை இறப்புகள் இருப்பின் உடனே கால்நடை மருத்துவ துறைக்கு தெரிவிக்க வேண்டும். கைகளை கழுவுதல் உட்பட தன் சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தினை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் இறந்த அல்லது நோய்வாய்ப்பட்ட பறவைகளை வெறும் கையால் தொடக்கூடாது. காகங்கள், புறாக்கள் அதிகளவில் இறந்து கிடந்தால் உடனே தகவல் தெரிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், பறவை இறந்த இடங்களில் வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏதாவது உள்ளதா எனவும் கண்காணிக்கப்படுகிறது.
பொதுஇடங்களில் இறைச்சி கழிவுகளை திறந்தவெளியில் கொட்டக்கூடாது. இது மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு நோய் பரவ காரணமாகலாம். இறைச்சிக் கடைகள் மற்றும் சுற்றுப்புறங்களை கிருமிநாசினிகள் தெளித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு வேகவைத்து உட்கொள்வது பாதுகாப்பானது எனத் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இந்நோய் சம்பந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி எண். 104-ஐ தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பெறப்படும் இறைச்சி, முட்டைகளை சமைக்காமலோ அல்லது முழுமையாக சமைக்காமலோ சாப்பிடுவது ஆபத்தானது என்கிறது உலக சுகாதார மையம்.
அப்பகுதிகளில் இருந்து , உடல்நிலை சரியில்லாத அல்லது திடீரென இறந்த விலங்குகளின் இறைச்சிகளை உண்பதையும் தவிர்க்க வேண்டும்.
கடந்த மாதம் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல காகங்கள் திடீரென உயிரிழந்ததையடுத்து, அவற்றின் மாதிரிகளை பரிசோதித்ததில் அவற்றுக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக பொது சுகாதார துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தற்போது கிண்டி பூங்காவில் உள்ள பறவைகள் இறந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.