விமானங்களுக்கு பயன்படுத்தும் ஏவியேஷன் எரிபொருளின் விலை அதிரடியாகக் குறைந்ததால், இந்தியாவில் வரும் நாட்களில் விமானக் கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமான எரிபொருளின் கட்டணம் திடீரென சர்வை சந்தித்ததால், அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களில் எரிபொருள் சார்ஜ் கட்டணத்தை நீக்குவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் விமான எரிபொருள் விலை அதிகமாக இருந்ததால் இண்டிகோ நிறுவனம் எரிபொருளுக்கென தனியாக கட்டணத்தை அறிமுகம் செய்தது. இதனால் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்தது. தற்போது எரிபொருளின் விலை குறைந்ததையடுத்து எரிபொருளுக்காக வாங்கப்பட்ட கூடுதல் கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வெளியான அறிக்கையில், “2024 ஜனவரி 4ம் தேதி முதல் இண்டிகோ தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த விமானங்களுக்கு விதிக்கப்பட்ட எரிபொருள் கட்டணத்தை நீக்குவதில் மகிழ்ச்சி அடைகிறது” என Indigo நிறுவனம் அறிவித்துள்ளது.
2023 அக்டோபர் மாதத்தில் எரிபொருளின் விலை அதிகமாக இருந்ததால் பயணிகள் பயணித்த தூரத்தின் அடிப்படையில் ரூபாய் 300 முதல் 1000 வரை எரிபொருள் கட்டணம் என தனியாக வசூலிக்கப்பட்டது. விமான சேவைக்காக ஆகும் செலவில் கிட்டத்தட்ட 40% வரை அதன் எரிபொருளுக்காகவே சென்றுவிடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால் விமானங்களில் அடிக்கடி பயணிப்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது எப்படி பெட்ரோல் விலை குறையும்போது பஸ் டிக்கெட் விலை குறைக்கப்படுகிறதோ, அதேபோல விமான எரிபொருள் விலை குறையும்போது விமான டிக்கெட் விலையும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் முடிவடைந்த காலாண்டில் இண்டிகோ நிறுவனத்திற்கு 188 கோடி லாபம் கிடைத்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 20% அதிகமாகும். எனவே இவர்களின் வருவாய் உயர்ந்துள்ளதால் தற்போது டிக்கெட் கட்டணத்தை குறைத்துள்ளனர்.