

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நடைபெறும் சந்தனக்கூடு/உருஸ் திருவிழா தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது:
டிசம்பர் 21 முதல் ஜனவரி 6 வரை கந்தூரி மற்றும் சந்தனக்கூடு விழாவை தர்கா நிர்வாகம் நடத்துகிறது. அதில் விலங்கு பலியிடுதல் மற்றும் அசைவ உணவு பரிமாறுதல் போன்றவை ஒரு முக்கிய பகுதியாகும். கந்தூரி நடத்த அனுமதி அளித்தது நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும். மலை மீது கோவிலின் தலவிருட்சமான கல்லத்தி மரம் உள்ளது. அதில் நிலா பிறை பொறித்த கொடி கட்டப்பட்டுள்ளது. அதை அகற்ற வேண்டும். மலையில் கந்தூரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்த மதுரை மாணிக்க மூர்த்தி கூறியுள்ளார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ். குமார் ஆஜரானார்.இதை நீதிபதி எஸ். ஸ்ரீமதி விசாரித்தார்.
ஜனவரி 6ல் சந்தனக்கூடு திருவிழாவிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். 2023ல் அனுமதி வழங்கப்பட்டது. அதே நடைமுறை தற்போதும் பின்பற்றப்படும். கந்தூரி உற்சவத்திற்கு அனுமதி வழங்கப்படாது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கண்டிப்பாக பின்பற்றப்படும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன் கூறியுள்ளார்.
தர்கா தரப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பாகிஸ்தான் கொடியை தர்கா நிர்வாகம் ஏற்றுகிறது, இறந்தவர்களின் உடல் மலையுச்சியில் புதைக்கப்படுகிறது என்று தவறான தகவலை அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், தர்காவுக்கு சொந்தமான இடத்தில் தான் கொடியேற்றப்படுகிறது என்றும் கூறினார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவில் உருஸ் திருவிழாவை மட்டுமே தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும். விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். விலங்குகளை பலியிடக் கூடாது. விலங்கு இறைச்சியை எடுத்துச் செல்லக்கூடாது. அசைவ உணவு சமைக்கக்கூடாது. அத்துடன் எந்தவொரு அசைவ உணவையும் எடுத்துச் செல்லக்கூடாது. இந்த உத்தரவை மலையின் அடிவாரம் முதல் உச்சிவரை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். சட்டம்-ஒழுங்கை போலீசார் கண்டிப்புடன் நிலைநாட்ட வேண்டும். கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் ஜனவரி 20ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.