வங்கிகொள்ளை - துப்பாக்கியால் விரட்டிய பெண் காவலர்கள்

வங்கிகொள்ளை - துப்பாக்கியால் விரட்டிய பெண் காவலர்கள்

பீகாரில் வங்கி ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை பணியில் இருந்த இரண்டு பெண் காவலர்கள் விரட்டி அடித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பீகார் மாநிலம் ஹாஜிபூர் மாவட்டம் செந்துவாரி சௌக் பகுதியில் உத்தர பீகார் கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. சாந்தி குமாரி, ஜூஹி குமாரி ஆகிய இரண்டு பெண் காவலர்கள் இந்த வங்கியின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

இந்நிலையில் காலை 11 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த 3 பேர் வங்கிக்குள் நுழைந்தார்கள். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த இரு பெண் காவலர்களுக்கும் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் வங்கி பாஸ்புக்கைக் காட்டுமாறு கேட்டனர்.

ஆனால், சட்டென எதிர்பாராத விதமாக முகமூடி கொள்ளையர்கள் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி நீட்டியுள்ளனர். இதையடுத்து அந்த பெண் காவலர்கள் தங்களது கைகளில் இருந்த துப்பாக்கியைக் கொண்டு கொள்ளையர்களைத் தாக்கி அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் தப்பித்தோம் பிழைத்தோம் என கொள்ளையர்கள் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

பெண் காவலர்கள் துரத்தியதில் கொள்ளையர்கள் வந்த இருசக்கர வாகனத்தை அப்படியே போட்டு விட்டு சென்ற நிலையில், வண்டியின் பதிவு எண்ணை வைத்து போலீசார் இந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 சமயோஜிதமாகவும், தைரியமாகவும் செயல்பட்ட பெண் காவலர்களை பொதுமக்கள் பலரும் பாரட்டினர். இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

கொள்ளை முயற்சி பற்றி தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி மணீஷ் அந்த வங்கிக்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். பெண் காவலர்களின் இந்த வீரச் செயலுக்காக பரிசு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தப்பி ஓடிய கொள்ளையர்களைத் தேடும் பணியை பீகார் காவல்துறை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com