இளைய தலைமுறையினரிடையே பாரதியாரின் தேசப் பற்றையும், மொழிப் பற்றையும் தன்னம்பிக்கையையும், ஆன்மீகத்தையும் எடுத்துச் செல்லும் உயரிய நோக்கத்தோடு, “உரத்த சிந்தனை” வாசக எழுத்தாளர் சங்கம், கடந்த எட்டு வருடங்களாக “பாரதி உலா” நிகழ்ச்சிகளை கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் நடத்தி வருகிறது.
தமிழகம் தவிர, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற வெளி மாநிலங்களிலும், பாரதி உலா நடைபெற்று வருகிறது.
இந்த வருடம் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் நடைபெற்ற பாரதிஉலா நிகழ்ச்சிகளின் நிறைவு விழா அண்மையில் சென்னை வாணி மகாலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சென்னை ஆடிட்டர், கலைமாமணி திரு ஜே. பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமை தாங்கினார்.
கோவை, தஞ்சை, திருச்சி, புத்தனாம்பட்டி, சென்னை உட்பட பல ஊர்களிலிருந்தும் மாணவ மாணவிகள் வந்திருந்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், கோயம்புத்தூர் தி யுனைடட் பள்ளி மாணவிகளின் பாரதியார் பாடல் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
போட்டிகளில் பங்கேற்று, பாரதியார் பாடல்களைப் பாடி வெற்றி பெற்ற மாணவ மாணவியர், பாரதியார் பேச்சரங்கத்தில் வெற்றி பெற்றவர்கள், ஓவியப் போட்டி களில் வென்றவர்கள் என்று மாணவச் செல்வங்களுக்கு பரிசுகள், விருதுகள், ஊக்கத்தொகை ஆகியவை வழங்கப்பட்டன.
திரைப்பட இயக்குனர் திரு. எஸ்.பி. முத்துராமன், நடிகர் டெல்லி கணேஷ், எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர், இயக்குனர் திரு. ராசி அழகப்பன், கவிஞர் முருகபாரதி ஆகியோர் மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.