
மத்தியப் பிரதேச மாநிலத் தேர்தலில் பாஜக தவிர வேறு எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் பாகிஸ்தானில் கொண்டாட்டம் நடக்கும் என்று அந்த மாநில உள்துறை அமைச்சரும், பாஜக வேட்பாளருமான நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். பா.ஜ.க. அமைச்சர் விரக்தியில் பேசுவதாக காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத் தேர்தலில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. தேர்தலில் தாதியா தொகுதியில் போட்டியிடும் மாநில உள்துறை அமைச்சரும், பாஜக வேட்பாளருமான நரோத்தம் மிஸ்ரா, தனது வாக்கைப் பதிவு செய்தார்.
பின்னர் பேசிய அவர், மக்கள் தாமைரைச் சின்னத்தில் வாக்களித்து பா.ஜ.க. வெற்றிபெற்றால் அது இந்தியாவுக்கு மகிழ்ச்சியைத் தரும். இத்தேர்தலில் பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் அது பாகிஸ்தானில் கொண்டாடப்படும். மத்தியப் பிரதேசத்தில் தாமரைச் சின்னத்துக்கு வாக்களிப்பது எல்லையில் ராணுவப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அமையும்.
பிரதமர் மோடியின் வெற்றி பாகிஸ்தானுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தாமரையை தீவிரவாதிகள் ஒரு தடையாகவே பார்க்கின்றனர். ஏனெனில் அது அவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி. நரோத்தம் மிஸ்ரா கூறுவதில் எந்த உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்தியப் பிரதேச மாநிலத்தில் சின்சுவாரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கமல்நாத் கூறுகையில், "நரோத்தம் முதலில் வெற்றி பெறட்டும் அதன் பிறகு பாகிஸ்தானைப் பற்றி பேசட்டும். விரக்தியால் அவர்கள் இப்படியெல்லாம் பேசுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 2,500க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு 2.87 கோடி ஆண் வாக்காளர்கள், 2.71 கோடி பெண் வாக்காளர்கள் என மொத்தம் 5.59 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
42 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு மையங்கள் பெண்களாலும், 183 வாக்குப்பதிவு மையங்கள் மாற்றுத் திறனாளிகளாலும் நடத்தப்படுகின்றன. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 27.79% வாக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.