

தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்புகளில், பல தேர்தல் முடிவுகளை மிகச்சிறப்பாக கணித்த 'ஆக்சிஸ் மை இந்தியா' நிறுவனத்தின் தலைவர் பிரதீப் குப்தா, பாஜகவின் எதிர்காலம் குறித்தும் கணித்துள்ளார். பிரதீப் குப்தா 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை மிகத் துல்லியமாக கணித்திருந்தார். தமிழகத்தில் நடிகர் விஜய் ஆட்சியைப் பிடிப்பார் என்று அவரது நிறுவனம் மட்டுமே கணித்திருந்தது. மற்ற நிறுவனங்கள் எதுவும் தங்களது கணிப்பில் விஜய்க்கு முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை.
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் மாபெரும் வெற்றி பெற்ற பின்னர் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை அதிகரித்தது.மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, இன்னும் எத்தனை ஆண்டுகள் வரை தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தும் என்று தோராயமாக பிரதீப் குப்தா கணித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு தொடங்கிய பாஜகவின் எழுச்சிமிக்க வெற்றி தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தற்போது உள்ள அரசியலில் பாஜகவின் ஆதிக்கம் குறைந்தது 20 ஆண்டுகள் வரை நீடிக்க வாய்ப்புள்ளது என்று பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார். ஒரு ஆளும் கட்சியின் செயல்திறன் கணிசமான அளவில் குறையாத வரை, அதன் ஆளுமைக்கு குறைவிருக்காது.
பாஜகவை முந்தைய காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கோடு பிரதீப் ஒப்பிட்டு காட்டினார். முந்தைய காலங்களில் நாடு விடுதலை பெற்றதில் இருந்து, தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி 1977 வரை ஆட்சியில் நீடித்தது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியில் பல வித சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. அந்த காலகட்டத்தில் , சுமார் 20 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக இந்தியாவை ஆட்சி செய்யக்கூடிய ஒரு அரசியல் கட்சியை பற்றி நாங்கள் விவாதித்தது உண்டு.
நாங்கள் அப்போது கணித்திருந்த 20 ஆண்டுகால ஆட்சி செய்யும் கட்சியின் ஆளுமை இப்போதும் தொடர்கிறது. இதன்படி இந்தியாவின் அரசியலில் பாஜகவும் நீண்ட காலத்திற்கு தனது ஆதிக்கத்தை நீட்டிக்கக்கூடும் என்று அவர் கூறியுள்ளார். பாஜக பெரிய அளவில் மக்களின் ஆதரவைப் பெற்று தொடர்ச்சியாக ஆட்சி செய்வதால் , அதன் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரண்டின் எதிர்காலமும் தற்போதைய அரசின் செயல்பாட்டைப் பெரிதும் சார்ந்துள்ளது என்று கூறிய அவர், பாரதிய ஜனதா கட்சி இனி 'மிகச் சிறப்பாகச் செயல்பட' வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார். பாஜகவினரின் செயல்பாடுகள் மோசமாகவோ அல்லது பலவீனமாகவோ மாறும் சூழல் வரும் வரை தொடர்ச்சியாக அவர்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பார்கள். எதிரணி தொடர்ச்சியாக தோற்றுக் கொண்டே இருக்கும்.
கடந்த காலத்தில் தவறான ஆட்சி முறை குறித்த கண்ணோட்டங்கள் , வாரிசு அரசியல் பிரச்சனைகள் போன்றவற்றை காங்கிரஸ் கட்சி எதிர் கொண்டுள்ளதால் , அதன் அரசியல் எதிர்காலம் மீட்சி பெற நீண்ட செயல்முறை தேவைப்படுகிறது. 2029 ஆண்டு பாராளுமன்ற தேர்தலைப் பற்றி பேசினாலும் கூட , இதுவரை 15 ஆண்டு காலமே முடிந்துள்ளது. இன்னொரு 5 ஆண்டு காலம் வரை இது நீடிக்கலாம்.
நாடு முழுக்க மக்கள் மனமாற்றம் அடைவதற்கு குறைந்தது 5 ஆண்டு காலம் வரை தேவைப்படும் என்று நான் உணர்கிறேன். அதேநேரம் அரசியல் ஆதிக்கம் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை தூண்டிவிடும். பெரும் உயரத்தை அடைந்த பின்னர், கீழே இறங்கும் போக்கு இருக்கும் , இது பாஜக மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள சூழலை எட்டியுள்ளது என்று பிரதீப் குப்தா கூறினார்.