சர்வதேச அளவில் சிறந்த இலக்கியத்துக்கான புக்கர் விருது 1969-ல் தொடங்கி ஒவ்வொரு வருடமும் வழங்கப் படுகிறது. உலகத் தரம் வாய்ந்த நாவல்கள், சிறுகதைகள் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புனை கதைகளுக்கு வழங்கப்படும் இந்த உயரிய புக்கர் விருது, இந்த ஆண்டு இலங்கை எழுத்தாளர் கருணாதிலகவுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.
இலக்கிய உலகின் மிக உயரிய கவுரவம் மிக்கதான இந்த புக்கர் பரிசு, நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இலக்கிய படைப்புகள் மற்றும் அந்தந்த பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்கள் ஆகியவற்றைப் பரிசீலித்து ஆண்டுதோறும் ஒரு நாவலுக்கு விருதாக வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டுக்கான புக்கர் பரிசு இலங்கையை சேர்ந்த எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகவுக்கு கிடைத்துள்ளது. லண்டனில் உள்ள ரவுண்ட்ஹவுசில் நடைபெற்ற இந்த விழாவில் விருது வழங்கப்பட்டது.
உலகம் முழுவதிலும் இருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்பிக்கப்பட்ட நிலையில், ஷெஹான் எழுதிய "தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மேடா" என்ற புனைகதை இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. "தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மேடா" நாவல் இலங்கையில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும், அந்நாட்டை பற்றியும் கொண்ட புனைகதையாக எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவை சேர்ந்த தேமன் கால்கட் என்பவர் "தி ப்ராமிஸ்" என்ற நாவலுக்காக இந்த விருதை பெற்றார். இந்தியாவைப் பொறுத்தவரையில் புக்கர் விருதானது 2008-ம் ஆண்டு அரவிந்த் அடிகா, 2006-ம் ஆண்டு கிரண் தேசாய், 1997-ம் ஆண்டு அருந்ததி ராய் ஆகியோருக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.