#BREAKING : அரசுப் பேருந்து டயர் வெடித்து 2 கார்கள் மீது மோதல் - 7 பேர் பலி!

BUS ACCIDENT
BUS ACCIDENT
Updated on

திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து, கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள ராமநத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாகப் பேருந்தின் முன்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புகளைத் (Divider) தாண்டி அதிவேகமாக எதிர் திசையில் பாய்ந்தது.

அச்சமயம் எதிரே சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர மோதலில் இரண்டு கார்களும் அப்பளம் போல் நொறுங்கி உருக்குலைந்தன. இதில் கார்களில் பயணம் செய்த 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்த ராமநத்தம் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் பலத்த காயமடைந்த மற்ற பயணிகளை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டன.

இந்த விபத்து குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com