‘கடந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்துக்கு மத்திய அரசு என்ன செய்தது என்பதை செல்ல முடியுமா?’ மு.க.ஸ்டாலின் கேள்வி!

‘கடந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்துக்கு மத்திய அரசு என்ன செய்தது என்பதை செல்ல முடியுமா?’ மு.க.ஸ்டாலின் கேள்வி!

ருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக சார்பில் இன்று நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், “நாடாளுமன்ற தேர்தல் களம் நமக்காகக் காத்திருக்கிறது. அடுத்த வருடம்தானே அது என்று அலட்சியமாக இருந்து விட வேண்டாம். பாஜகவின் செல்வாக்கு  நாடு முழுவதும் நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. அந்தக் கோபத்தில் அவர்கள் தேர்தலை முன்கூட்டியே கூட நடத்துவார்கள். அதனால் நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை பாஜக பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார். எதற்காக இந்தப் பொதுக்கூட்டம் என்றால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயார் ஆவதற்காகத்தான். கடந்த ஒன்பது ஆண்டு கால பாஜக ஆட்சியில் அரசு செய்த சிறப்புத் திட்டங்களின் பட்டியலை அமித் ஷா வெளியிட வேண்டும் என்று பணிவுடன் நான் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்பதை பட்டியலிட அமித் ஷா தயாரா? 2004 முதல் 2014 வரை காங்கிரஸ், திமுக கூட்டணியில்தான் தமிழ்நாட்டுக்கு சிறப்புத் திட்டமாக சென்னை மெட்ரோ ரயில் கொண்டு வரப்பட்டது. இந்த காலகட்டத்தில் இந்திய அரசின் திட்ட செலவில் 11 விழுக்காடு தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.

இதில் மிக முக்கியமான 69 திட்டங்கள் அடங்கும். தமிழுக்கு செம்மொழி தகுதியைப் பெற்றத் தந்தோம். தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை துறை திட்டப்பணிகள் 56,654 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டது. மேலும், 1559 கோடி ரூபாய் செலவில் சேலம் உருக்காலை மேம்படுத்தப்பட்டது. தாம்பரத்தில் சித்த மருத்துவ ஆய்வு மையம், 120 கோடி ரூபாய் செலவில் சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சேது சமுத்திர திட்டம், நெசவாளர்களுக்கு செட்வாட் வரி நீக்கம், 908 கோடி ரூபாய் செலவில் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பொடா சட்டம் ரத்து, மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அனைத்தும் மாற்றம், ஒகேனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம், கிண்டி கத்திபாரா மற்றும் பாடியில் மேம்பாலங்கள், சரக்கு போக்குவரத்து முனையம் போன்றவை அந்த காலகட்டத்தில்தான் உருவாக்கப்பட்டவை. இதுபோன்ற ஒரு பட்டியலை தமிழ்நாட்டுக்கு வரவிருக்கும் அமைச்சர் அமித் ஷாவுக்கு சொல்லும் ஆற்றல் இருக்கிறதா? இதுதான் என்னுடைய கேள்வி.

ஒரு பெரிய திட்டத்தை அவர்கள் 2015ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு அறிவித்தார்கள். அதுதான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. அதை அறிவித்து எட்டு வருஷம் ஆச்சு. இதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளார்களா? இந்தத் திட்டத்தை அறிவித்தபோது பல்வேறு மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமைனை அறிவித்து அதனைக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் ஏன் கட்ட முடியவில்லை? இந்தக் கேள்விக்கு தமிழ்நாடு வரும் அமித் ஷா அவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தித் திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, நீட் கொடுமை, மூன்று வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டம், மாநில உரிமைகள் பறிப்பு, மாநில நிதியை கொடுக்க மறுப்பது; இதுதான் அவர்கள் செய்த சாதனை” என்று பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com