லாலு மீதான வழக்கை மீண்டும் கையிலெடுத்தது சி.பி.ஐ!

லாலு பிரசாத்
லாலு பிரசாத்
ஜெ.ராகவன்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மீதான ஊழல் வழக்கை மீண்டும் கையிலெடுத்துள்ளது மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ). அண்மையில் பிகாரில் ஐக்கிய ஜனத்தாளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார், பா.ஜ.க.வுடனான உறவை முறித்துக் கொண்டு லாலுவின் ராஷ்டிரிய ஜனத்தாளம் கட்சியுடன் கூட்டுசேர்ந்து ஆட்சிமைத்த சில மாதங்களில் இந்த அதிரடி நடவடிக்கை சிபிஐ எடுத்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி முதன் முதலாக ஆட்சி செய்தபோது ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத், ரயில்வே நிலங்களை ஒதுக்கீடு செய்வதில் ஊழல் செய்ததாகக் கூறி 2018 இல் சிபிஐ வழக்கு தொடர்ந்த்து.

இந்த ஊழல் புகார் தொடர்பாக லாலு மீதான புகார்கள் நிரூபிக்க முடியாத நிலையில் வழக்கை முடித்துக் கொள்வதாக கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் சிபிஐ அறிவித்தது.

லாலு தவிர, அவரது மகனும் பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மகள்கள் சந்தா யாதவ், ரஜினி யாதவ் ஆகியோரது பெயரும் இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது கட்சியில் பிளவு ஏற்படுத்த பா.ஜ.க. முயல்வதாக கூறி, உறவை முறித்துக் கொண்டு லாலு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து நிதிஷ்குமார் ஆட்சியமைத்த சில மாதங்களில் சிபிஐ இந்த வழக்கை கையிலெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ –இன் இந்த நடவடிக்கை அரசியலில் பெரும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, அரசு புலனாய்வு ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குரலெழுப்பக்கூடும்.

மும்பையின் பாந்த்ராவில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு விடுவதில் டிஎல்எப் குழுமத்துக்கு லாலு சாதகமாக இருந்ததாகவும் அதற்காக அவருக்கு தில்லியில் ஒரு பங்களா லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

73 வயதான லாலு, இந்த மாத தொடக்கத்தில் சிறுநீரக அறுவைச்சிகிச்சை செய்துகொண்டு அதிலிருந்து அவர் மீண்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com