சமீப காலமாக டிஜிட்டல் மோசடி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் மோசடிக்காரர்கள் வங்கி அதிகாரிகள் போல பேசி, கடவுச்சொற்களை பெறுவதும், சிறிது நேரத்திலேயே கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதும் என்று மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுப்பதற்கு சைபர் கிரைம் அதிகாரிகள் பல வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். அத்துடன் மக்களுக்கும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூபாய் 30 ஆயிரம் வழங்கும் திட்டம் என்ற பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூபாய் 30 ஆயிரம் வழங்கப்படும் என்றும், 2025 ஆம் ஆண்டு விரைவில் முடிய உள்ளதால் இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடைந்து விடும் என்றும், அதனால் கீழே உள்ள லிங்கை உடனடியாக அழுத்தி அந்தத் தொகையை பெறுங்கள். இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்றும், இத்திட்டத்தால் பயன்பெற முடியாது என்றும் தெரிவிக்கிறது. இதனைப் பலரும் படிப்பதுடன், பலருக்கும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், இது போலியான செய்தி என்றும், இம்மாதிரியான திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் இப்படிப்பட்ட வதந்திகளை பரப்பாதீர்கள் இது இணைய குற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.