

சென்னையில் சமீபகாலமாகக் கொசுக்களின் பெருக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அலைந்து திரிகின்றனர். வாகனங்களில் வந்து கொசு மருந்து புகை அடித்தாலும், பெரிய அளவில் நிவாரணம் எதுவும் கிடைக்காததால் சுகாதாரத் துறை அதிகாரிகள் புதிய முயற்சியில் கொசுக்களை அழிக்கத் திட்டமிட்டனர். அதன்படி சென்னை மக்கள் கொசுத்தொல்லை தாங்க முடியாமல் திண்டாடி வரும் நிலையில், கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மழைநீர் வடிகால்வாய்க்கே கொசுவலை போர்த்தும் நூதன முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
கொசுக்களின் ஆயுட்காலம் 21 நாட்களிலிருந்து 29 நாட்களாக அதிகரித்துவிட்டதால், அவற்றின் பெருக்கம் அதிகரித்துள்ளது என்று பூச்சியியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மழைநீர் வடிகால்வாய்களில் கொசுவலை கட்டி, லார்வா நிலையிலேயே கொசுக்களை அழிக்கத் திட்டமிட்டு, முதற்கட்டமாகத் திருவொற்றியூர், திரு. வி. க. நகர் உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் இப்பணிகள் நடந்து வருகின்றன.
அதாவது, சாலையில் ஓடும் மழைநீரை வடிகால்வாயினுள் விழும்படி செய்ய ஆங்காங்கு சிறிய அளவிலான தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தத் தொட்டிகளின் மூடியைத் திறந்து, கொசுவலை போர்த்தி, அதன் மேல் மீண்டும் மூடி வைக்கப்படுகிறது. தொட்டிக்குள் உள்ள கொசுக்கள், மூடியில் உள்ள துளைகள் வழியே வெளியேறுவதைத் தடுப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
பொதுவாகக் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக மழைநீர் வடிகால்வாய் மூடி வழியாகப் புகை மருந்து அடிக்கப்படும். அப்போது மழைநீர் சேகரிப்புத் தொட்டியின் வழியாகக் கொசுக்கள் வெளியேறிவிடும். இதைத் தடுக்கும் வகையில் தொட்டிக்குள் கொசுவலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் சாலையில் மழைநீர் தேங்க வாய்ப்பில்லை. மழைநீர் தேங்கினால் தான் லார்வாக்கள் உருவாகும். லார்வா நிலையிலேயே கொசுக்களை ஒழிக்கும் முயற்சி இது என்று சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.