
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து குப்பைகள், கழிவுகளை சேகரிப்பதற்காக நாள்தோறும், வாகனங்களில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் வந்து குப்பைகளை சேகரித்து செல்கின்றனர். இதனால் சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாள் தோறும் 6 ஆயிரத்து 400 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பயோ மைனிங் முறையில் அகற்றப்படுகிறது. இதற்கிடையே, வீடுகளில் குப்பை சேகரிக்க செல்லும் ஊழியர்களிடம் சேதம் அடைந்த பழைய சேர்கள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் வழங்குகிறார்கள். சிலர், சாலையோரங்களிலும், குப்பை தொட்டி அருகிலும் போட்டு விடுகின்றனர். துாய்மை பணியாளர்கள் குப்பை கழிவுகளை எடுத்தாலும், சோபா, படுக்கைகள் உள்ளிட்டவற்றை எடுக்காமல் விட்டு விடுகின்றனர்.
இதனால் குப்பை சேகரிக்கும் பணியாளர்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர். அத்துடன் மிகப்பெரிய அளவிலான பொருட்களை ஓரிரு வீடுகளில் இருந்து பெறுகின்றபோது மற்ற வீடுகளுக்கான குப்பைகளை எடுப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இதேபோல, மக்கள் பலர் வீட்டிற்கு புதிய பொருட்களை வாங்கும் போது பழைய பொருட்களை குப்பையில் வீசுவதும், வீடுகளை காலி செய்யும் போது தேவையில்லாத கட்டில், சோபா, மர இருக்கை, பழைய துணி, கட்டில், மெத்தை படுக்கைகள், மின்னணு கழிவுகள் ஆகியவற்றை குப்பை தொட்டிகளில் வீசிவிட்டும் செல்கிறார்கள். இதனால் நடைபாதையில் நடப்பதற்கும், போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படுவதாகவும், இந்த குப்பைகளால் துர்நாற்றம் மற்றும் கொசு உற்பத்திக்கு காரணமாவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் சென்றவாறு இருந்தது.
இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் என இரு தரப்பும் சந்திக்கும் இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்காக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேங்கிக் கிடக்கும் பயன்படுத்த முடியாத அல்லது தேவையற்ற பழைய பொருட்களை சேகரித்து அகற்றுவதற்காக ஒரு புதிய சேவையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, சென்னையில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் வீடுகளில் தேங்கிக் கிடக்கும் பயன்படுத்த முடியாத அல்லது தேவையற்ற பழைய பொருட்களைச் சேகரித்து அகற்றுவதற்கு ஒரு புதிய சேவையை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில், சனிக்கிழமை தோறும் வீடுகளில் உள்ள தேவையற்ற, உபயோகமற்ற சோபா, படுக்கைகள், துணிகள், மற்ற பொருட்கள் போன்றவற்றை வாகனங்கள் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்கள் மூலம் சேகரிப்பார்கள்.
பொதுமக்களும் உங்கள் வீடுகளில் இதுபோன்ற பழைய பொருட்கள் இருந்தால் 1913 என்ற எண்ணிலும், 9445061913 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், நம்ம சென்னை செயலியிலும் தங்களது கோரிக்கைகளை பதிவு செய்யலாம். உங்களது கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்கப்படும்.
அதன்பின்னர், மாநகராட்சி ஊழியர்கள் தனி வாகனத்தில் கோரிக்கை வைத்த வீட்டுக்கு நேரடியாக சென்று தேவையற்ற பொருட்கள் சேகரிப்பார்கள். அவ்வாறு சேகரிக்கப்படும் தேவையற்ற பழைய பொருட்கள் மறுசுழற்சி மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்கள் எரியூட்டப்படும்.
இதன் வாயிலாக, தேவையில்லாத பொருட்கள் சாலையில் தேங்குவது தடுக்கப்படும். இதன்மூலம் பொது இடங்களில் உங்கள் பழைய பொருட்களை சாலைகளில் போடுவதை தவிர்த்து, சென்னையைத் தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.