பக்ரீத் பண்டிகைக்கு அனுமதி இல்லாத இடத்தில் மாடுகளை வெட்டத் தடை – உயர்நீதி மன்றம் உத்தரவு!

Chennai High court
Chennai High court Live law
Updated on

பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் பொழுது பொது இடங்களில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவது வழக்கமாக உள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி பொதுச் செயலாளரான சூரியகாந்த் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.

அந்த மனுவில் கடந்தாண்டு கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பக்ரீத் பண்டிகையின் பொழுது, செல்வபுரம் பகுதியில் அனுமதி பெறாமல் தற்காலிகமாக தகர கொட்டாய்களை அமைத்து, விதிகளை மீறி மாடுகள் வெட்டப்பட்டதாக புகார் தெரிவித்திருந்தார். இது சம்பந்தமாக உள்ளூர் காவல் துறையினரிடம் புகார் செய்து , அவர்கள் உதவியுடன் சம்பவ இடத்திலிருந்து 7 மாடுகளை மீட்டு கோசாலைக்கு அனுப்பி வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டிலும் பக்ரீத் பண்டிகை அன்று கோவையின் முக்கிய பகுதிகளான துடியலூர் சந்தை, ரத்தினபுரி மசூதி , உக்கடம், செல்வபுரம், குனியமுத்தூர், கள்ள மேடு, கோட்டைமேடு, போத்தனூர் உள்ளிட்ட இடங்களில் சட்ட விரோதமாக பொது இடங்களில் மாடுகளை வெட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக சூரியகாந்த் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற சட்டவிரோதமாக செயல்பட்டு, விலங்குகளை பலியிடுவதை தடுத்து நிறுத்தி அவற்றை கோசாலைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று, செல்வபுரம் காவல் நிலையத்தில் மனுதாரர் புகார் அளித்துள்ளார். ஆயினும் புகாரின் மீது காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், நீதிமன்றம் இதில் தலையிட்டு நியாயமான உத்தரவை பிறப்பித்து, மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 2020 ஆம் ஆண்டில் , சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒன்று , பொது இடங்களில் விலங்குகளை பலியிடுவதற்கு தடை விதித்து தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது என்பதை முதலில் சுட்டிக்காட்டினர்.

1976 ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசாணைப்படி பசுவதை தடை செய்யப்பட்டுள்ளது. மாடுகளை வெட்டுவதற்கோ, பலியிடுவதற்கோ நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெறப்பட்ட இறைச்சிக் கூடங்களில் மட்டுமே மாடுகளை வெட்ட அனுமதி உள்ளது. இவற்றை சுட்டிக்காட்டி முந்தைய தீர்ப்புகளையும் கூறிய நீதிபதிகள் அமர்வு இறுதியாக தீர்ப்பளித்தது

இந்த தீர்ப்பின்படி தமிழக முழுவதும் பக்ரீத் பண்டிகையின் போது அனுமதிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களை தவிர, தெருக்களிலோ பொது இடங்களிலோ மாடுகளை வெட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இறைச்சிக்கூடங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல் துறையினர் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com