

2025-26 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை ஒன்பதரை மணியளவில் தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். வரும் 20ஆம் தேதி 2026-27 ஆம் ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கையும், 2025- 26 க்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்படுகின்றன.
தமிழக இடைக்கால பட்ஜெட்டில் துறைவாரியாக நிதி ஒதுக்கீடு பற்றி கூறிய அமைச்சர் மெட்ரோ ரயில் திட்டங்களை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாடு அறிவித்துள்ள இந்த பட்ஜெட் திட்டம் சென்னை மக்களின் பயண நேரத்தை குறைத்து பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய உதவும் வகையில் அமைந்துள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டங்களில் மூன்று வழித்தடங்களில் 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் பகுதியை இயக்குவதற்கான அனுமதி ரயில்வே வாரியத்திடமிருந்து விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் வடபழனியில் தற்போதுள்ள மெட்ரோ வழித்தடத்துடன் இணைக்கப்பட உள்ளது. 11 மெட்ரோ நிலையங்களைக் கொண்ட 14.6 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
கோயம்பேடு முதல் பட்டாபிராம் வழியாக ஆவடி வரையிலும், ஸ்ரீபெரும்புதூர் வழியாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையிலுமான புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புக்கான முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை கொண்டு வருவதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாக 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று குறிப்பிட்டார். இத்திட்டங்கள் நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துவதுடன் பொருளாதார வளர்ச்சியையும் துரிதப்படுத்தும் என்று கூறினார்.