சென்னை பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த புகைப்படக் கலைஞரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றிய கே.வி.சீனிவாசன் இன்று அதிகாலை 4.30 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி வைபவ நிகழ்ச்சியில் புகைப்படங்களை எடுத்து கொண்டிருந்தார். அப்போது நிகழ்ச்சியினிடையே உடல்நிலை பாதிக்கப்பட்டு பணியின் போதே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது.
கே.வி.சீனிவாசன் நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து நாளிதழில் வெளியிடுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த அவருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் பத்திரிக்கையாளர் குடும்ப உதவி நிதித்திட்டத்தின் கீழ், உயிரிழந்த கே.வி.சீனிவாசன் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். கே.வி. சீனிவாசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் புகைப்பட கலைஞர் கே.வி.சீனிவாசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்