பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்ப கெஞ்சிய உதவி ஆய்வாளருக்கு முதல்வர் பாராட்டு!

பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்ப கெஞ்சிய உதவி ஆய்வாளருக்கு முதல்வர் பாராட்டு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

திருவள்ளூர் மாவட்டம், பென்னலூர்பேட்டை அருகே பழங்குடி மக்கள் வசிக்கும் திடீர் நகர் பகுதிக்கு சென்ற, பென்னலூர்பேட்டை பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம், அப்பகுதி மக்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பயிற்சி காவல் உதவி ஆய்வாளரின் இந்த விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வந்தது.

அந்த வீடியோவில் அவர், “யாருக்காவது உதவி தேவைப்பட்டால் என்னை காவல் நிலையத்தில் பார்க்கலாம். பள்ளிக் கட்டணம், சாப்பாடு என எந்த உதவிக்கும் என்னை அணுகலாம். கையெடுத்துக் கேட்கிறேன். தயவு செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். ஐந்து நாட்கள் பள்ளிகளில் முட்டையும், இரண்டு நாட்களுக்கு பயறும் வழங்கப்படுகிறது. குழந்தைகள் படிக்க, யார் காலில் விழுந்தாவது உதவி செய்கிறேன். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்தான் குற்றவாளி. குழந்தைகள் விஷயத்தில் நான் விடமாட்டேன். குழந்தைகளுக்கு கல்வி தர மறுப்பது, அவர்களுக்கு விஷம் கொடுப்பது மாதிரி, சமுதாயத்தை கருவறுப்பது மாதிரி. தப்பான மூட நம்பிக்கையால் மாட்டிக்காதீங்க” என்று பேசிய அவர், அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த விழிப்புணர்வு வீடியோவை பார்த்த பொதுமக்கள் மட்டுமல்லாமல், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பயிற்சி காவல் உதவியாளர் பரமசிவத்தைப் பாராட்டி இருந்தனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் காவலர் பரமசிவத்தைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில்,

"காலைச் செய்தித்தாளில் மகிழ்ச்சி தரும் செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன். குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன்" என்று அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com