‘கருத்தை கருத்தால் எதிர்கொள்வதே அறம்’ சீமானுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின்!

‘கருத்தை கருத்தால் எதிர்கொள்வதே அறம்’ சீமானுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின்!
Updated on

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது. ‘இந்தியத் தகவல் தொழில் நுட்பச் சட்ட விதிகளை மீறி இவர் தனது ட்விட்டர் கணக்கில் செய்திகளைப் பதிவிடுவதாக’ வந்த கோரிக்கையை ஏற்று, இவரது ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீமானை தவிர, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட அக்கட்சி நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகளும் தற்காலிகமாக இந்தியாவில் முடக்கப்பட்டு இருக்கின்றன. இவர்களோடு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டிருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெறிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்’ என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com