தமிழகத்தில் முதல் நகரசபை கூட்டம்; இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Updated on

 தமிழகத்தில்  உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று முதன்முதலாக நகர சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. சென்னை தாம்பரத்தில் பம்மல் 6-ம் வார்டில் நடைபெறும் நகரசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று தொடங்கி வைக்கிறார். ஆனால் வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு இடங்களில் நகரசபை  கூட்டங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 இன்று உள்ளாட்சி தினம் என்பதால் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அதே சமயம் முதல்முறையாக நகரசபை கூட்டங்களும் இன்று நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. நகராட்சி அளவில் மக்களுக்கு இருக்கும் குறைகளை கேட்டறிய நகராட்சி கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

 இதையடுத்து தமிழ்நாட்டில் நகர மற்றும் மாநகர சபை கூட்டங்களை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று தாம்பரத்தில் பம்மல் 6-ம் வார்டில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று தொடங்கி வைக்கிறார்.

வார்டு கவுன்சிலர்கள் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில்,  மக்கள் தங்கள் நகர பகுதிகளில் உள்ள தண்ணீர் பிரச்சனை, சாலை பிரச்சனை, மின் விளக்கு பிரச்சனை, கழிவு நீர் பிரச்சனை, மழை நீர் கால்வாய் பிரச்சனை போன்றவற்றை விவாதிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.  ஆனால் தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் நகரசபை கூட்டங்கள் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com