

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைத் தடுப்பது குறித்து முதலமைச்சர் விஜய், தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. அனிஷா உசேன், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜி பவானிஸ்வரி, தலைமைச் செயலர் சாய் குமார், உள்துறை செயலர் மணிவாசன், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் சட்டம் ஒழுங்கு மேம்படுத்துவது தொடர்பான முக்கிய ஆலோசனைகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெற உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் மற்றும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுதல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.