சுற்றுச் சூழலை மேம்படுத்த 30 நிலக்கரி சுரங்கங்கள் மூடல்: மத்திய நிலக்கரி துறை செயலர் அறிவிப்பு!

சுற்றுச் சூழலை மேம்படுத்த 30 நிலக்கரி சுரங்கங்கள் மூடல்: மத்திய நிலக்கரி துறை செயலர் அறிவிப்பு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நாட்டின் மின் உற்பத்தித் தேவைக்கு 75 சதவிகிதம் அளவுக்கு அனல் மின் நிலையங்கள் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகின்றன. அனல் மின் நிலையங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒரு ஆண்டுக்கு சராசரியாக 892 மில்லியன் டன் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் 220 மில்லியன் டன் நிலக்கரி வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.

மின் உற்பத்திக்காக நிலக்கரி பயன்படுத்தப்படுவதால் பெருமளவு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரமும் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, அடுத்த நான்கு ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள முப்பது நிலக்கரி சுரங்கங்கள் மூடப்பட உள்ளதாக மத்திய நிலக்கரி துறை செயலாளர் அமிர்த் லால் மீனா தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியாவில் நிலக்கரியின் தேவை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆயினும், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு முடிந்த அளவுக்கு நிலக்கரி சுரங்கங்களை குறைத்துக் கொள்ளும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நிலக்கரி சுரங்கங்கள் மூடப்படுவதால்  அந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் சுற்றுச்சூழல் மேம்பாடு அடையும். மேலும், மூடப்படும் நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் காடுகள் மற்றும் நீர்நிலைகள் ஆகியவை உருவாக்கப்படும். அதோடு, அந்தப் பகுதிகளில் வேளாண்மை செய்வதற்கான வாய்ப்புகளும் அப்பகுதி மக்களுக்கு உருவாக்கித் தரப்படும்” என்று  மத்திய நிலக்கரி துறை செயலாளர் அமிர்த் லால் மீனா தெரிவித்து உள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com