கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்ஜிங் மற்றும் சீனாவின் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் வானத்தில் மர்மமான பொருள் ஒன்று பரப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த அசாதாரண நிகழ்வு சீன சமூக ஊடக தளங்களில் பெரிய விமர்சனத்திற்குரிய ஒன்றாக மாறியது. திங்கட்கிழமை மதியம் வரை 9 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் இணையத்தில் அதிகம் தேடிய தலைப்பாக இது மாறியது. ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் வானத்தில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று பரப்பதை அனைவரும் புகைப்படம் மற்றும் காணொளியாக எடுத்து சமூக ஊடக தளங்களில் பதிவிட்டனர். பெய்ஜிங் பகுதியில் வசிக்கும் ஒரு நபர் அதை “நகரும் மேகம் போன்ற பொருள்” எனக் குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
ஏற்கனவே அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுக்கள் பெய்ஜிங் பகுதிக்கு அப்பால் ஷாங்சி மற்றும் ஷின்டாங் பகுதிகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த நிகழ்வை நேரில் கண்டவர்கள் ஒளிரும் தன்மை இல்லாத ஒரு மேகப்பந்து என குறிப்பிட்டனர். இதை நாம் ஒரு விமானம் எனக் கூறினாலும், அதில் எவ்விதமான ஒளியும் வெளிவரவில்லை என்பதால், விமானமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகின்றனர்.
பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தின் வானியல் தொழில்நுட்ப மையத்தின் ஆராய்ச்சியாளரான வாங், இந்த நம்ப முடியாத உண்மையை விளக்கினார். இந்த நம்ப முடியாத மர்ம பொருள் ராக்கெட் ஏவுதலுக்கு பிறகு நடக்கும் விஷயமாக இருக்கலாம் என அவர் கூறுகிறார். குறிப்பாக சமீபத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஏவப்பட்ட நிலையில் அதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு இருந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஸ்பேஸ் X நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலமாக 22 செயற்கைக்கோள்கள் பூமியின் குறைந்த சுற்றுவட்டப் பாதைக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது 53 டிகிரி சாய்வில் வடக்கு சீனாவின் மீது கொண்டு வந்தது அந்நிறுவனம். இப்படி செயற்கைக்கோளை வரிசைப்படுத்தும் போது ராக்கெட்டில் இருந்து அதிகப்படியான எரிபொருள் வெளியேற்றப்படும். இதுதான் பார்ப்பதற்கு மேகக்கூட்டம் போல உருவாகி இருக்கும் என அவர் கூறினார்.
இருப்பினும் இந்த நிகழ்வைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம் கலந்து, அந்த வித்தியாசமான மேகக் கூட்டத்தை கண்டு ரசித்தனர் என்றுதான் கூற வேண்டும்.