

வேலூரில் பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி அரசு பேருந்தில் ஏறி பயணிகளிடம் கலந்துரையாடி வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவை தொகுதிகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் தமிழக முதல்வர். அந்த வகையில் இன்று காலை கே வி குப்பம் தனித் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள திமுக வேட்பாளர் ராஜலட்சுமியை ஆதரித்து வீடு வீடாகச் சென்று வீடு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அங்கே பிரச்சாரம் மேற்கொள்ளும் போது லத்தேரி செல்லும் மகளிர் இலவச அரசு பேருந்தில் ஏறி அதிலிருந்த மகளிரிடம் கலந்துரையாடினார்.
வேலூரில் நடைப்பயிற்சியின் போது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பதுடன், பிரச்சார வாகனத்திலிருந்து இறங்கி அரசு பேருந்தில் ஏறி பயணிகளிடம் வாக்கு சேகரிப்பதுமாக மக்களை சந்தித்து வரும் முதல்வர் ஸ்டாலினை நேரில் பார்த்த மக்கள் உற்சாகமாக அவருக்கு வரவேற்பு அளித்தனர்.