கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பட்டு வரும் அவதிக்கு தீர்வுகாணும் வகையில், அந்தப் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட வேண்டும் கோரிக்கை தொடர்ந்து இருந்து வந்தது.
இந்நிலையில் ஒரு புதிய பாலமானது உப்பிலிபாளையம் முதல் கோல்ட் வின்ஸ் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் ஒரு 4 வழிச் சாலையாக இருக்கும். மேலும் இந்த பாலம் தமிழ்நாட்டின் முதல் நீண்ட தொலைவுடைய மேம்பாலம் ஆகும். இந்த மேம்பாலத்தில் விளக்குகள் பொருத்துப்பட்டு அண்மையில் வாகனங்களை இயக்கி சோதனை ஓட்டமும் நடைபெற்றது.இப்பாலம் ரூ.1,791.23 கோடி மதிப்பில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்டப் பாலமாக கட்டப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இப்பாலத்திற்கான திட்டப்பணி தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் முடிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தமிழக முதல்வர் நாளை அக்.9ம் தேதி அன்று திறந்து வைக்கிறார்.
இந்த பாலத்தின் மொத்த தூரம் 10.10 கிலோ மீட்டர். ஓடுதள அகலம் 17.25 மீட்டர். 304 தூண்களைகக் கொண்டது. அவிநாசி சாலையில், 4 வழித்தட உயர்மட்டப் பாலம், 6 வழித்தடத்துடன் விரிவுபடுத்தப்பட்ட தரைத்தளச் சாலை என மொத்தம் 10 வழித்தடங்களுடன் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு, தென்னிந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட பாலமாக இது உள்ளது.
உப்பிலிபாளையம் - கோல்டுவின்ஸ் வழித்தடத்தில் அண்ணாசிலை, பீளமேடு ஆகிய இடங்களில் ஏறுதளங்களும், ஹோப்காலேஜ், விமான நிலையம் ஆகிய இடங்களில் இறங்குதளமும் அமைந்துள்ளன.
கோல்டுவின்ஸ் - உப்பிலிபாளையம் வழித்தடத்தில் விமான நிலையம், ஹோப் காலேஜ் ஆகிய இடங்களில் ஏறுதளங்களும், பீளமேடு, அண்ணாசிலை ஆகிய இடங்களில் இறங்குதளமும் அமைக்கப்படுகிறது.விமான நிலைய ஏறுதளம் 577 மீட்டர், விமான நிலைய இறங்குதளம் 567 மீட்டர், ஹோப்காலேஜ் ஏறுதளம் 483 மீட்டர், இறங்குதளம் 527 மீட்டர், நவ இந்தியா ஏறுதளம் 561 மீட்டர், இறங்குதளம் 551 மீட்டர், அண்ணாசிலை ஏறுதளம் 411 மீட்டர், இறங்குதளம் 391 மீட்டர் தூரம் கொண்டதாகும். இதில் அண்ணாசிலை ஏறுதளம் மட்டும் நீதிமன்ற வழக்கின் காரணமாக நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அணுகுசாலையான கோல்டுவின்ஸ் அருகே 183 மீட்டரும், உப்பிலிபாளையம் அருகே 267 மீட்டரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஹோப்காலேஜ் சந்திப்பில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. அதன் மீது 52 மீட்டர் தூர நீளத்து 8 இரும்பு கார்டர் 725 டன் எடையுடன் பொருத்தப்பட்டுள்ளது.. இரு தூண்களுக்கு இடையே அமைக்கப்படும் ஓடுதளம் காரிடர், தென்னம் பாளையத்தில் உள்ள தனியிடத்தில் தயாரிக்கப்பட்டவையாகும்.இப்பாலத்தின் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளன.இப்பாலத்தின் மீது வாகனங்கள் செல்லும்போது அதிர்வு மற்றும் சத்தம் கேட்பதை தவிர்க்க, புதிய தொழில் நுட்பங்களுடன் ‘சைனஸ் பிளேட்’ பொருத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய பாலத்தின் மூலம் கோவை நகரிலிருந்து விமான நிலையம் செல்லும் பயண நேரம் 45 நிமிடத்திலிருந்து வெறும் 10 நிமிடமாக குறைகிறது. கோவை நகரிலிருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், அவிநாசி செல்வதற்கு முன்பு 10 சிக்னல் சந்திப்புகளை கடந்து செல்ல வேண்டியிருந்த நிலையில், தற்போது இந்த மேம்பாலம் மூலம் அந்த பயண நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.
கோவைக்கு தனது புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்தவர் இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு ஆவார்.அவரின் பெயர் இந்த மேம்பாலத்துக்குச் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.