முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, சென்னை ஆர்.கே.நகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் பாஜகவை சேர்ந்த நடிகைகளை இரட்டை அர்த்தத்தில் பேசியது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
திமுக பொதுக்கூட்டத்தில் பாஜகவில் உள்ள 4 நடிகைகள் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதற்காக சைதை சாதிக் மீது பாஜக மகளிர் அணி சார்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தவறான வார்த்தையில் பேசியதாக திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் " ஐயம்" என்று சொல்வதற்கு பதில் வாய் தவறி அதுபோல் பேசிவிட்டதாக மழுப்பலாக கூறியுள்ளதும் சர்ச்சையை கிளறியுள்ளது.
அவர் மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமுடி பற்றியும் விமர்சித்து பேசிய அவர், குஷ்பு திமுகவில் இருக்கும்போது என்று அவரை வைத்து இரட்டை அர்த்தம் தரும் வகையில் சைதை சாதிக் பேச அங்கு சிரிப்பலை எழுந்தது. சைதை சாதிக்கின் இந்த பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட குஷ்பு, "பெண்களை இழிவுபடுத்தும் ஆண்களிடம், அவர்கள் வளர்ந்த விதம் மற்றும் அவர்கள் வளர்க்கப்பட்ட நச்சுத்தன்மையான சூழலை பார்க்க முடிகிறது. ஒரு பெண்ணின் கருப்பையை ஆண்கள் அவமதிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தது பரபரப்பை கிளறியது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி அவர்களையும் ட்விட்டரில் டேக் செய்திருந்தார் குஷ்பூ.
தி,மு.க. எம்பி கனிமொழி கூட அதற்கு ட்விட்டரில் குஷ்பூவிடம் மன்னிப்பு கேட் டிருந்தார். "பெண்ணாகவும், மனிதராகவும் இந்த பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பேசப்பட்ட இடம், அவரது கட்சி எதுவாக இருந்தாலும் இந்த பேச்சை ஏற்க முடியாது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுகவால் இந்த பேச்சை ஒருபோதும் ஏற்க முடியாது." என்றார் கனிமொழி .
இந்த விவகாரம் தற்போது பல்வேறு தரப்பினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து பலரும் சைதை சாதிக்கின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர் .
இந்த நிலையில் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணியினர் புகாரளித்து இருக்கிறார்கள். மாநில பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் புகாரளித்துள்ளனர்.