

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழலில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முழுமை அடையவில்லை. காங்கிரஸ் தரப்பில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று நிர்வாகிகள் தொடர்ந்து கூறி வருவதால், திமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சியின் ஆட்சியா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அவர் கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக மக்கள் கொடுத்த வாய்ப்பை தமிழக காங்கிரஸ் கமிட்டி தவறவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக எம்எல்ஏ ராஜகண்ணப்பன் “கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் வரட்டும்; வராவிட்டால் போகட்டும்” என தடாலடியாக தெரிவித்திருந்தார். இது காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவடையாத சூழலில், ராஜகண்ணப்பனின் பேச்சு அரசியல் களத்தை சூடாக்கியது. இந்நிலையில் “ஆட்சியில் பங்கு என்பது எங்களுடைய உரிமை” என இன்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.