

தமிழக அரசியல் களத்தில் எதிரும் புதிரும் ஆக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் ஒருபுறம் இணைந்தாலும் , மறுபுறம் தொடர்ச்சியாக 22 வருடங்களுக்கு மேலாக திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருந்து வருகிறது. ஆனால், இந்த தேர்தலில் தொடர்ச்சியாக திமுகவை சீண்டும் விதமாக காங்கிரஸ் கட்சியினர் பேசி வருவதும், அதற்கு திமுகவினர் பதிலடி கொடுப்பதும் சமீபத்திய தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டது.
தேர்தல் அரசியல் சூழலில் மாறிவரும் கூட்டணிகளுக்கு தகுந்தவாறு நண்பர்கள் பகைவர்களாக மாறுவதும், நீண்ட நாள் பகையாளிகள் நண்பர்களாக மாறுவதும் இயல்பான ஒரு விஷயம் தான். 2004 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக பதவி ஏற்றதில் இருந்து திமுக காங்கிரஸ் கூட்டணி இன்றுவரை தொடர்ந்து வருகிறது. காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்திந்து வருவதால், கூட்டணியை விட்டு பல கட்சிகள் வெளியேறினாலும், திமுக மட்டுமே ஆதரவு கொடுத்து வருகிறது. இப்படிப்பட்ட நம்பகமான நீண்ட நாள் கூட்டணியில், ஒரு சிலர் புகைச்சலை கிளப்பி கொண்டே வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்களில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி, முதன் முதலாக திமுகவிற்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்தார். அவர் வெளிப்படையாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை பாராட்டி பேசிக் கொண்டிருந்தார். இவர் பேசியதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து பலரும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைத்து, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இடம் பெற வேண்டும் என்று பேச தொடங்கினர். கரூர் துயர சம்பவத்திற்கு பின்னர், ராகுல் காந்தியும் விஜய்க்கு தொலைபேசியில் ஆறுதல் சொல்லியது திமுகவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கிடையில் பிரவீன் விஜய்யை ரகசியமாக சந்தித்து பேசியதும் வெளிப்பட்டது.
பிரவீன் சக்கரவர்த்திக்கு அடுத்ததாக விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஆன மாணிக்கம் தாகூர் , மிகக் கடுமையாக திமுகவை விமர்சித்து பேச ஆரம்பித்தார். இதற்கு முன்னர் மாணிக்கம் தாகூர் பொதுவெளியில் அதிக ஊடக சந்திப்புகளை நடத்தாதவர். ஆனால் , இப்போது தினமும் தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும் திமுக தலைமையிலான தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், அமைச்சர் பதவிகளையும் அதிக அளவிலான இடங்களையும் கேட்டு கடும் நெருக்கடியை கொடுத்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி பிரமுகர்களின் திமுக விரோத பேச்சுக்கு பதிலடியாக திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ராஜ கண்ணப்பண் பதிலடி கொடுத்தார். இதனை அடுத்து உடனடியாக அவரை தலைமையகத்திற்கு திமுக தலைமை வர சொல்லியிருந்தது. அதன் பின்னர் ராஜ கண்ணப்பன் பொதுவெளியில் காங்கிரசை பற்றி எந்த ஒரு கருத்தும் கூறுவதில்லை. மாணிக்கம் தாகூரின் கடுமையான விமர்சனத்திற்கு அடுத்ததாக நேற்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை , காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகாஜூன கார்கேவை சந்தித்தார். இந்த நிலையில் மாணிக்கம் தாகூர் அச்சமில்லை அச்சமில்லை என்று தான் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
செல்வப்பெருந்தகை திமுக அரசுடன் இணக்கமாக இருக்கவே விரும்புகிறார் , அதே நேரம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு நெருக்கமானவர்கள் சிலர் ,தவெக வை காட்டி திமுகவிடம் அதிக டிமாண்ட் செய்ய இவ்வாறு நடந்துக் கொள்வதாக கூறப்படுகிறது. திமுகவோ தங்களை விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க காங் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆயினும் மேலிடம் எதுவும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருப்பது , கூட்டணி மாறுவதற்கா? அல்ல அதிக சீட்டுகளை பெறும் தந்திரமா என்று சில தினங்களில் தெரிந்து விடும்.