

பாராளுமன்றத்தில் இன்று (பிப் 10) எதிர்க்கட்சி எம்பிக்கள் 119 பேர் இணைந்து கையெழுத்திட்டு , நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா அவர்கள் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வருவதற்காக, நோட்டீஸ் நாடாளுமன்ற செயலாளரிடம் கொடுக்கப்பட்டது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்குமென்று பாராளுமன்றத்தில் பரபரப்பு நிலவுகிறது.
நம்பிக்கை இல்லாத தீர்மானம் பின்னணி:
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் , குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், பிரதமரின் உரையோடு நிறைவேற்றப்படும். இந்த உரையை முன்னிட்டு எதிர்கட்சி சார்பில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் பாதுகாப்பை பற்றி பேசத் தொடங்கினார். அப்போது முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே எழுதிய 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' புத்தகத்தில் உள்ள சில கருத்துக்களை காட்டி பேச முயற்சி செய்தார்.
ராகுல் காந்தி கையில் வைத்திருந்த புத்தகம் இதுவரை வெளியிடப்படாத நிலையில் , அதை வைத்து பேசக்கூடாது என்று சபாநாயகர் ஓம்பிர்லா அவர்கள் பேச அனுமதி மறுத்தார். அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக எதிர்க்கட்சியினர் சபையில் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு உரையாற்ற சில நிமிடங்கள் இருக்கும் நிலையில், அவரது இருக்கையை சுற்றி காங்கிரஸ் பெண் எம்பிக்கள் திரண்டு கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டிருந்தனர்.
இதை தொடர்ந்து சபாநாயகர் அவையை ஒத்தி வைத்ததோடு , பிரதமர் நரேந்திர மோடியை பெண் எம்பிக்கள் தாக்க உள்ளதாக கூறி , அவரை நாடாளுமன்றத்திற்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனால், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. மேலும் அமளியில் ஈடுபட்டிருந்த 8 உறுப்பினர்களை சஸ்பென்ட் செய்திருந்தார். இதை தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு வெளியிலும் சில நாட்கள் எதிர்கட்சி எம்பிக்கள் போராட்டம் செய்தனர்.
அடுத்த நாள் , பாஜக எம்பியான நிஷிகாந்த் துபே ஒருசில வெளியாகாத புத்தகங்களை குறிப்பிட்டு பாராளுமன்றத்தில் பேசினார். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களை பற்றி மிகக் கடுமையாக விமர்சித்தார். இதைத்தொடர்ந்து சபையில் தொடர்ச்சியாக அமளி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கை இல்லாத தீர்மானத்திற்காக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 119 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து இட்டிருந்தனர்.
சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானத்திற்கு காங்கிரஸ் எம்.பிகள் காரணமாக கூறுவது " ராணுவத் தளபதி எம்.எம். நரவானே எழுதிய 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' புத்தகம் பற்றி ராகுல் காந்தி பேச அனுமதி மறுத்தது , அதே நேரம் ராகுல் காந்தியின் குடும்பத்தினரை பற்றிய புத்தகங்களை பற்றி பேச மட்டும் அனுமதி கொடுத்தது , 8 உறுப்பினர்களை சஸ்பென்ட் செய்தது ," ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளனர்.
சபாநாயகரை நீக்க ஆர்ட்டிக்கிள் 94 ன் கீழ் சட்டத்தில் இடமுள்ளது. குறைந்தது 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை வழிமொழிய வேண்டும். தீர்மானம் விவாதத்திற்கு வரும் போது துணை சபாநாயகரே, சபாநாயகரின் பொறுப்பை ஏற்றுக் கொள்வார். தீர்மானத்திற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர்களின் 50% வாக்களிக்க வேண்டும். இந்தியாவில் இதற்கு முன் 3 முறை சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால் , அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.